
தில்லியில் வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது, அதுவும் ரேஷன் கடைகளின் மூலமே விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.
இந்திய மக்களின் அன்றாட சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்தது வெங்காயம். அண்மைக் காலமாக வெங்காயத்தின் விலை மளமளவென்று அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.30, அல்லது 40 என்று விற்றுக் கொண்டிருந்த வெங்காயத்தின் விலை, நாட்டின் பல பகுதிகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், தலைநகர் தில்லியிலும் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.
முன்னர், வெங்காய விலை உயர்வு ஒன்றினாலேயே, தில்லியில் பாஜக., மாநில அரசு படு தோல்வியைச் சந்தித்தது. அந்த வரலாறும் தில்லியில் உள்ளதால், வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் உள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவார். தில்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் நியாயமான விலையில் வேன்கள் மூலம் 100 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அவர் அண்மையில் அறிவித்தார்.
அதன்படி இந்த விற்பனையை நேற்று அவர் தொடங்கி வைத்தார். இதற்காக மாநில தலைமை செயலகத்தின் முன் 70 லாரிகளில் வெங்காயம் கொண்டு வரப்பட்டன. அவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அரவிந்த் கேஜ்ரிவால். இந்த வெங்காயம் ரேஷன் கடைகள் மூலமும், வேன்கள் மூலமும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.24-க்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 5 கிலோ வெங்காயம் கிடைக்கும். இந்த வெங்காய விற்பனை மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
இந்த வெங்காயம் பெறுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவை இல்லை! மக்கள் தங்கள் குடும்ப தேவைக்கு மட்டுமே நேர்மையாக வாங்கி செல்ல வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த வெங்காய விற்பனை திட்டத்துக்காக நாளொன்றுக்கு 1 லட்சம் கிலோ வெங்காயம், முதல் 5 நாட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வாங்கப்படும்! பின்னர் தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்! வெங்காயம் விலை குறையும் வரை தில்லி அரசின் இந்த நியாயவிலைக் கடை மூலமான வெங்காய விநியோகம் தொடரும் என்றார் அவர்.