பயண வாரன்ட் கேட்டதால் பஸ் நடத்துனரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை ஆயுதப்படை போலீசார் மகேஷ் தமிழரசன் ஆகியோர் நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்தில் கைதிகளை அழைத்துச் சென்றனர்.
காவல் துறை வேலை தொடர்பாக, அரசுப் பேருந்தில் பயணிக்கும் போது, போலீசார் தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுத்து பயணம் செல்லாமல், காவல்துறை வழங்கும் பயண அட்டையை பயன்படுத்தலாம்.
அதுபோல், அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை போலீசார் இருவரிடமும் பயண அட்டை நடத்துனர் ரமேஷ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால், முகத்தில் குத்துப் பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட காயம் அடைந்தார் நடத்துனர் ரமேஷ். ரத்தம் வழிந்த நிலையில் நடத்துனர் ரமேஷ் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் செல்லுமாறு ஓட்டுநரிடம் சொன்னார்.
மூன்றடைப்பு காவல் நிலையத்தில் போலீஸார் இருவர் மீதும் தன்னைத் தாக்கியதாக நடத்துனர் புகார் அளித்தார். அதற்குள், நடத்துனரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதை அடுத்து காவலர்கள் இருவர் மீதும் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை போலீசார் இருவரையும் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருள்சக்தி குமார் நேற்று உத்தரவிட்டார்.
இதனால் ஆயுதப் படைக் காவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, காவலர்கள் சார்பில் சிலர் வாட்ஸ் அப் வழியே ஆதரவுக் கருத்துகளையும் வெளியிட்டனர்.