ஹைதராபாத் எல்.பி.நகர் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் தீயில் சிக்கி காயமடைந்த ஒரு குழந்தை உயிரிழந்தது. 5 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஐசியூவில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஒரேயடியாகத் தீ மூண்டு புகை சூழ்ந்தது. இதில், மூச்சு விடமுடியாமல் ஒரு சிசு இறந்தது. நான்காவது மாடியில் இந்தத் தீ பற்றியது.
இன்டன்சிவ் கேர் யூனிட்டில் 6 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனை ஊழியர் ஒருவர், ஜன்னலை உடைத்து தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் இயலவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளை அருகில் இருக்கும் வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை மருத்துவம் ஆரோக்கியம் துறை கூடுதல் டைரக்டர் ரவீந்தர் நாயக், எல்பிநகர் டிஸிபி சன் ப்ரீத் சிங் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து நான்கு மாடிகளையும் தீவிரமாக பரிசோதனை செய்தனர். மருத்துவமனையில் நடந்த தீவிபத்து தொடர்பாக, விசாரணையை தீவிரப்படுத்த குழு ஒன்று களத்தில் இறங்கியுள்ளது.
என்ஃபோர்ஸ்மெனட் அதிகாரிகள் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஷைன் குழந்தைகள் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சுனீல் ரெட்டியை காவலில் எடுத்துள்ளார்கள். விபத்துக்கான காரணம் அறிவதற்கு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அங்கு தீ விபத்து நடந்தவுடன் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மருத்துவமனையை தங்கள் கட்டுப் பாட்டில் எடுத்து மூடிய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மருத்துவமனை வாசலில் குழந்தைகளின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கில் பில் போட்டு ஃபீஸ் வாங்கிக் கொண்டு பாதுகாப்பு வசதி இன்றி இருக்கும் மருத்துவமனைகளை அரசு கண்டு கொள்ளாதது பற்றி பொது மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.