விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 26 பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும், சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவதூறு பரப்பியதாக திருமாவளவன், வேல்முருகன், திருமுருகன்காந்தி உள்ளிட்ட 26 பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது அரசியல் மட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்மைக் காலமாக, நீதித்துறை, அரசு, நிர்வாகம் என அனைத்துத் தரப்பும், இந்து, இஸ்லாமிய பெரியவர்கள், அமைப்புகள் ஆகியோரைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அமைதிக் கூட்டங்கள் நடத்தி, மனத்தளவில் தயாராக்கப் பட்ட பிறகே அயோத்தி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு அளிக்கப் பட்டது. இதில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா வேண்டாமா என்ற சட்ட ரீதியான விவாதங்களை மட்டுமே இந்த வழக்கில் தொடர்புடைய இஸ்லாமிய தரப்பு மேற்கொண்டுள்ளது.
வேறு எந்த இடத்திலும், உச்ச நீதிமன்றத்தை விமர்சித்தோ, கேவலமாகப் பேசியோ பிரிவினைவாத சக்திகள் கரங்கள் மேலோங்கியிருக்கும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்களோ போராட்டங்களோ நடக்கவில்லை.
ஆனால், பிரிவினைவாதிகளின் குரலாக மேடைகளை ஆக்கிரமித்திருக்கும் திருமாவளவன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றோரை தங்களின் கூலிப் படையினராக பிரிவினைவாதிகள் பயன்படுத்திக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வழக்கில் காவல்துறை அனுமதியின்றி கூடியது, நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது, பிரிவினையை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுவதால் உடனடியாக மூவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் மதமோதல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப் படுகிறது.