ஏழைப் பங்காளர்களாக இருந்த கம்யூனிஸ்ட்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக.,விடம் ஏதோ கொஞ்சம் 20, 25 கோடி ரூபாய்க்கு பெட்டி வாங்கிக் கொண்டு போட்டியிட்டு கெலித்து விட்டதால், இப்போது படு காஸ்ட்லி தோழர்கள் ஆகி விட்டார்கள்.
அவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.
வெங்காய விலை அதிகரித்து வருவதற்கு எதிராக ராமேஸ்வரத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நூதன போராட்டம் நடைபெற்றது.
வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்தியன் வங்கி கிளை எதிரே தங்கத்துக்கு பதிலாக “வெங்காயத்தை” அடமானம் வைக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நேற்று நடத்தினர் கம்யூனிஸ்ட்கள்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அதில் கலந்து கொண்டவர்கள் பேசியபோது… “வெங்காய விலை தங்கம் போல் ஏறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் வெங்காயத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கால் கிலோ வெங்காயம் வாங்கவே பெரும்பாடாக உள்ளது. வெங்காயம் மட்டுமின்றி பல்வேறு காய்கறிகளின் விலை உயர்வு சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இதனால் வெங்காயம் வாங்க வங்கிக் கடன் வழங்கவும், வெங்காயத்தை தங்கத்திற்கு பதிலாக அடகு வைத்து கடன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம்” என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிடத் தக்க அம்சம், ரொம்ப காஸ்ட்லி என்று சொல்லி அவர்கள் குறிப்பிட்ட தங்கத்தை விடவும் விலை அதிகமான வெங்காயத்தை மாலையாகப் போட்டுக் கொண்டு அனைவரும் பங்கேற்றதுதான்! ரொம்பவும் பாதுகாப்பானதாகவும், அடகு வைக்கக் கூடிய காஸ்ட்லி பொருளாகவும் இருக்கும் வெங்காயத்தை சர்வசாதாரணமாக கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கேற்றது, அங்குள்ள மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
வெங்காயம் விலையும் உயரக் கூடாது, விவசாயிக்கும் கூடுதல் பணம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து ஆச்சரியத்தில் பொதுமக்கள் வாய் பிளந்து நின்றனர்.