முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து, அவர் தில்லி காவல்துறையிடம் பாதுகாப்புக் கோரி புகார் அளித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கடந்த மக்களவைத் தேர்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவருக்கு சர்வதேச தொலைபேசி எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அவர் தில்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, தில்லி துணை காவல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள புகார் கடிதத்தில், “+7 (400) 043 எனும் சர்வதேச தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வருகிறது. இதுகுறித்து எனது செயலர் கௌரவ் அரோரா காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
எனவே இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, எனது குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.