கன்னியாஸ்திரி ஒருவருக்கு போப் பிரான்சிஸ் முத்தமிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி, வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவதற்காக வந்த போப், பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்தார்.
அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் நிலைகுலைந்து போன போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை உதறிவிட்டார். இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, போப் பிரான்சிஸ் சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும், ஒரு மோசமான உதாரணத்தை நான் காண்பித்துவிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வாடிகன் நகரில் உள்ள அதே புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ்ஸிடம், பார்வையாளர் வரிசையில் நின்றுகொண்டிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் எனக்கு முத்தம் தருவீர்களா என கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத போப், நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்கக் கூடாது என கிண்டலாக கூறியவர் கன்னியாஸ்திரியின் வலது கன்னத்தில் முத்தமிட்டார்.
இந்த காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும் கூறி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போப் பிரான்சிஸ், தற்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு முத்தமிட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.