திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என்று திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார் திமுக பொருளாளர் துரைமுருகன்!
வேலூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த திமுக., பொருளாளர் துரைமுருகன், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விலகட்டும். எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
மேலும், தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது; இன்னும் பிரியவில்லை; கூட்டணியில் யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை; கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம் என்று கூறினார் துரைமுருகன்.
இவ்வாறு கூறுவதற்குக் காரணம் காங்கிரஸின் அழகிரியும், ப.சிதம்பரமும் பேசிய பேச்சுக்களும் கருத்துகளும்தான்!
உள்ளாட்சியில் காங்கிரசுக்கு உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் ப.சிதம்பரம் எழுதிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ப.சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என்ற வருத்தத்தை தமிழக காங்கிரஸ் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தனது, ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே தவிர, இது மிரட்டல் அல்ல எனவும் 2021ஆம் ஆண்டு சட்டன்றத் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இதுகுறித்து தனது ஆதங்கத்தை ஒரு அறிக்கையாக வெளிப்படுத்தியிருந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
ஆனால் அது தேசியதலைமையிடத்திலும், திமுக., தலைமைக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. தில்லியில் காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் திமுக., புறக்கணித்தது. அதற்கு அழகிரியின் அறிக்கைதான் காரணம் எனக் கூறப் பட்டது.
அதே நேரம், தில்லி சென்ற அழகிரியிடம் காங்கிரஸ் தலைமை கடிந்து கொண்டுள்ளது. இத்தகைய பின்னணியில் காங்கிரஸுக்கு திமுக.,வுக்கும் இடையிலான கூட்டணி ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறப் படுகிறது.
அடுத்து வரும் ரஜினியை வைத்து அவர் உதவியில் தாங்களே ஆட்சியமைக்கலாம் என்று காங்கிரஸ் கருதுவதாக வந்த தகவல்களை அடுத்து திமுக., தலைமை கோபம் கொண்டதாகவும் கூறப் படுகிறது. இதன் பின்னணியில்தான் துரைமுருகன் இன்று அவரது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னொரு கூட்டணியான பாஜக., அதிமுக., இடையே இதே போன்ற மனத்தாங்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பாஜக.,வின் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக., வின் ஜெயக்குமார் ஆகியோருக்கு இடையே எழுந்துள்ள வார்த்தை மோதல்கள், கூட்டணிக்குள் இதே போன்ற பிரச்னையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப் படுகிறது. ஆனால், இரண்டாம் மட்டத் தலைவர்களை பேசத் தூண்டிவிட்டு அதிமுக., தலைமை வேடிக்கை பார்ப்பதாக பாஜக.,வினர் கூறுகின்றனர்.