பொங்கல் பண்டிகையின் சிறப்பு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் தான். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கடந்த 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், நேற்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் நடைபெற்றது.
அதே போல, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிராவயல் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தைத்திங்கள் 3 ஆம் நாள் நடைபெறும். சிராவயல் மஞ்சுவிரட்டு நேற்று சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நடைபெற்றது. அதில், 101 காளைகளும் அதனை அடக்க 61 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர்.
நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது, ஒரு காளை மைதானத்திலிருந்து வெளியேறி ஆவேசமாகச் சீறிப்பாய்ந்ததுள்ளது.
அப்போது ஒரு தாய் தனது குழந்தைகளுடன், அந்த காளையின் எதிரே நடந்து சென்றுள்ளார். காளையைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து பயத்தில் குழந்தைகளுடன் அந்த தாய் கீழே குனிந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த காளை, தனது ஆவேசத்தை அடக்கி அவர்கள் மூன்று பேரையும் தாண்டி சென்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது.