உத்தரப்பிரதேசத்தில் மனைவி அழகாக இருப்பதால், அவரது முடியை கணவன் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மனைவி அழகாக இருப்பதால், யாரும் அவரை பார்க்கக்கூடாது என்ற நோக்கில், மனைவியின் முடியை வெட்டியுள்ளார் கணவன்.
மீரட் நகரைச் சேர்ந்தவர் ஆரிப். இவரது மனைவி ரோஷ்னி. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் சமீபகாலமாக இவர்களிடையே அவ்வ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ரோஷ்னிக்கு வெளியில் யாருடனோ தொடர்பு இருப்பதாக ஆரிப் சந்தேகித்து அவரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் ரோஷ்னி அழகாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அவரது தலைமுடியை வெட்டியுள்ளார். மேலும், அவரை ஒரு அறையில் வைத்து பூட்டி, வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, தனது கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டிலிருந்து தப்பித்த ரோஷ்னி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது கணவர் எப்போதும் தன்னை சந்தேகிப்பதாகவும், அவ்வப்போது அடித்து துன்புறுத்துவதாகவும் ரோஷ்னி புகார் அளித்துள்ளார். கணவருக்கு தனது மாமியாரும் துணை போனதாக அவர் கூறியுள்ளார். மேலும், தலைமுடியை வெட்டினால் யாரும் தன்னை பார்க்க மாட்டார்கள் என்று ஆரிப் கூறியதாக தெரிவித்தார்.
ரோஷ்னியின் புகாரை அடுத்து, காவல்துறையினர் ஆரிப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.