அண்மையில் ‘திரெளபதி’ பட டிரைலர் வெளியானபோது பெரும் பரபரப்பு எழுந்தது. டிரைலரின் தாக்கமே இப்படி இருக்கிறதே, படம் வந்தால் என்ன ஆகுமோ என்று ஒரு சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனாலும் இந்த திரெளபதி டிரைலருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வந்தது.
திரௌபதி படம் வட மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் படமாகவும், அப்பா – மகள் உறவு குறித்து பேசும் படமாகவும் உருவாகியிருக்கிறது.
திரௌபதி படத்தின் இயக்குனர் திரையுலகில் பலராலும் கவனிக்கப் படும் நபர் ஆகிவிட்டார். இந்தப் படம் பற்றி அவர் பேசிய போது… இந்த படத்தினை திரையரங்குகளில் சென்று பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, டவுன்லோட் செய்தாவது பாருங்கள். இந்தப் படம் பார்ப்பதற்காக மட்டுமே எடுத்த திரைப்படம் என்றார்.
நடிகர் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரெளபதி படத்தை வெளியிட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழலில் படத்தை விரைவில் வெளியிடுவதாகவும், 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட உள்ளதாகவும் இயக்குனர் மோகன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திரௌபதி படத்தின் பிரிவியூ ஷோ நேற்று திரையிடப் பட்டது. இதனை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பார்த்தனர். இதன் பின்னர் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா …
நீண்ட நாட்களுக்கு பிறகு தந்தையும், வயது வந்த மகள்களும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தான் இந்த திரௌபதி. ஒவ்வொரு பெண்குழந்தைகளும் திரௌபதி போலவே வாழவேண்டும். மேலும் சமூகத்தை சீர்படுத்தும் படமாகவே இந்த திரௌபதி படம் அமைந்துள்ளது.
நானும் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவன்.
தற்போது எனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகி வளமாக வாழ்கின்றனர்.
அதுபோலவே அனைத்து பெண் குழந்தைகளும் நலமாக வாழவேண்டும் என தெரிவித்தார்.