அமைதியின்மை, வேகம் குறைந்த பொருளாதார வளர்ச்சி, உலக அளவிலான தொற்று நோய் தாக்குதல் ஆகிய மூன்று பிரச்சனைகளின் ஆபத்துகளை மையமாக வைத்து முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங் ஹிந்து நாளிதழில் கட்டுரை எழுதி இருக்கிறார்.
அரசை – மோடி தலைமையிலான ஆட்சியை அல்ல- இந்திய அரசை “ majoritarian state “ என்று குறிப்பிடுகிறார். மிகவும் தரம் தாழ்ந்த அரசியல்வாதியின் வார்த்தைகளைப் போன்றது இந்த வார்த்தை.
உலகின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா எப்போது திகழ்ந்தது?
சிவகாசி போன்ற திருப்பூர் போன்ற கோவை போன்ற தொழில் சார்ந்த அடையாள மையங்கள் அகில இந்திய அளவில் தோன்றி வளர்ந்ததில் அரசாங்கத்தின் பங்கு எவ்வளவு?
அந்நிய செலாவணி ஈட்டும் மென்பொருள் உற்பத்தித் துறையும் தனி நபர்களின் ஊக்கத்தால் உண்டாகி வளர்ந்தவை தான். மனதி வளம் ஈட்டக் கூட்டிய அந்நிய செலாவணியின் பின்னணியில் இருப்பதும் கூட வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் தனி மனிதர்களின் முனைப்பால் தான்.
கனிமங்களையும், தாதுப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு , அதே நாடுகளில் இருந்து இயந்திரங் களை இறக்குமதி செய்வதில் நமக்கு அவமான உணர்ச்சி இருந்தது உண்டா?
2008 ம் ஆண்டு வீழ்ச்சி அடைந்த இந்திய பொருளாதாரம் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில் செயற்கையாக தூக்கி நிறுத்தப்பட்டது. அப்படி தூக்கி நிறுத்த பயன்படுத்தப்பட்ட செயற்கையான உத்திகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் உண்டாக்கிய அழிவு மிகப் பெரியது.
அமைதியின்மை பொருளாதார சரிவுக்கு வழி வகுக்கும் என்பது உண்மை தான். ஆனால், அமையின்மையை ஆட்சியாளர்கள் உண்டாக்குகிறார்களா அல்லது பொருளாதார சரிவை உண்டாக்கி இந்த அரசுக்கு நெருக்கடியை தோற்றுவிக்கும் முயற்சி நடக்கிறதா?
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்தி, இந்தியாவை உலகின் மாபெரும் சந்தையாகவே வைத்திருக்கும் நோக்கத்தில் அமைதி – அமைதியின்மை என்ற மாயப் பிசாசை காட்டி ஏமாற்றும் வேலை நடந்து கொண்டு இருந்ததா? இப்போதும் நடக்கிறதா?
தொடரும் பிரச்னைகளை தீர்க்காமல் தள்ளி வைத்து தற்காலிக அமைதியை நாடு பெற்றுக் கொண்டு வந்தது. தீர்க்கப்படாத பிரச்னைகள் ஒரு நாள் தேசத்தையே அழுகி விழச் செய்து விடக்கூடிய ஆபத்து உண்டா இல்லையா.?
மோடி ஆட்சி எல்லா முனைகளிலும் தகதகவென பிரகாசிக்கும் ஆட்சி அல்ல; முந்தைய எந்தொரு ஆட்சியை விட மட்டமான ஆட்சியல்ல. மோடி ஆட்சி எதிர்கொள்ளும் சவால்களை இதற்கு முந்தைய எந்த ஆட்சியும் சந்தித்ததில்லை. அப்படி சந்தித்தும் கூட நிலை குலையாமல் இருப்பதால், முந்தைய எந்தவொரு ஆட்சியையும் விட நம்பத்தகுந்த ஆட்சி தான்.
majoritarian State என்பதன் பொருள் பெரும்பான்மை மத அரசு என்பதாகும். பெரும்பான்மை மத ஆட்சி என்பதற்கும் பெரும்பான்மை மத அரசு என்பதற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மன்மோஹன் சிங் கூட மட்டமான அரசியல்வாதி அளவுக்கு இறங்கி வர முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
- வசந்தன் பெருமாள்