2 ரூபாய்க்கு கூட தேராது இதை 2 கோடிக்கு வாங்கினான் பாருங்க #Yes_Bank காரன்… இதற்கு பேர் தான் குதிரை மேல் கழுதை சவாரி செய்யறது… இதில் யார் குதிரை, யார்கழுதை என்று மக்களே முடிவு செய்யட்டும் வரைந்த வரின் பெயரை பார்க்கவும் – பிரியங்கா .. என்று சமூகத் தளங்களில் இந்த ஓவியமும் தகவலும் வைரலாகப் பரவி வருகிறது.
தற்போது நிதிச் சிக்கலில் தள்ளாடி வரும் யெஸ் வங்கி, அடுத்து ஆர்.பி.ஐ. , கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கியில் வாராக்கடன் அளவு அபாயக் கட்டத்தில் உள்ளது. வங்கியில் பணம் போட்டோரின் நிலையும் பரிதாபகரமாக உள்ளது.
இதற்கு வாராக் கடன் மற்றும் நிதி நிர்வாகத்தில் கோட்டை விட்டது, வேண்டுமென்றே வங்கியின் கடன் அளவுகள் நிர்ணயிக்கப் பட்ட வீதத்தைக் காட்டிலும் பெருமளவு அதிகரித்தது என்று காரணங்களை அடுக்குகின்றனர். அதே நேரத்தில் ஊதாரித்தனமாக வங்கியின் பணத்தை கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிக்ஸ் அடித்தால் ஒரு லட்சம், கேட்ச் பிடித்தால் ஒரு விருது பணம் என்றெல்லாம் அள்ளி விட்டது என்று காரணங்களை அடுக்குகின்றனர்.
அதே நேரம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வத்ராவின் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு யெஸ் வங்கி வாங்கியது என்றும், இது போல் பணம் தாறுமாறாக முறைகேடான செயல்களுக்கு மடை மாற்றப் பட்டது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் பிரியங்கா வரைந்த அந்த ஓவியம் என்ன என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி, ஒரு கழுதை குதிரை ஓவியத்தை பிரியங்கா பெயர் பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர் சிலர். அந்த ஓவியத்தில், மஞ்சள் வண்ணத்தில் கீழே குதிரையும், அதன் மேல், காவி நிற வண்ணத்தில் ஒரு கழுதையும் அமர்ந்திருப்பது போல் ஓவியம் இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுதான் பிரியங்கா வரைந்த ஓவியமா என்பது தெரியாத நிலையிலும், வட இந்திய இணையதளம் ஒன்றில் வெளியான இந்தப் படம் இப்போது வைரலாகிவிட்டது. சர்ச்சை ஓவியர் எம்.எஃப்.ஹுசைனின் இந்த ஓவியத்தைக் குறிப்பிட்டு… கழுதைக்கு காவி நிறம் அடித்த காரணத்தால்தான் யெஸ் வங்கி இதனை 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பலர்.
இது குறித்து பாஜக., ஐ டி பிரிவின் அமித் மால்வியா பதிவு செய்த டிவிட்டர் பதிவில், பிரியங்கா வத்ரா, தன் உழைப்பில் இல்லாத, தனக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு ஓவியத்தை ரானா கபூருக்கு விற்றதில் ரூ. 2கோடி பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் பதில் கருத்து அளித்து வருகின்றனர். அதில் இந்த குதிரை, கழுதை ஓவியமும் சிலரால் குறிப்பிடப் பட்டிருக்கிறது.