உடல்நலம் பாதிக்கப்பட்டோர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்று அக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவை தொடங்கி பல நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது. தற்போது இந்தியாவிலும் பரவி, கரோனாவால் இதுவரை 73 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அந்தந்த கோயில் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
அந்தவகையில், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகின்றனர்.
அதேபோன்று கரோனா அறிகுறி உள்ளவர்கள் சபரிமலைக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்று திருவாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது. மேலும், திருமலைக்கு வரும் பக்தர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துவரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் மற்றும் பழனி கோயிலுக்கு வரவேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.