கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்த கே.பி. ராமலிங்கம், தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆராய வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அவரது கருத்து சமூக மட்டத்தில் மடத்தனமான கருத்து என்று விமர்சனம் எழுந்தது.
இது குறித்து தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம், பொதுமக்கள் மனநிலையில் நின்று தனது கருத்தைத் தெரிவித்தார். கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது. விவசாயிகளுக்கு ஊரடங்கில் இருந்து முதல்வா் விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான் என்று கருத்து தெரிவித்தார்.
கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை ஆமோதிக்காமல், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், கொரோனா நேரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது என்று கேபி ராமலிங்கம் கூறியது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சித் தலைமை எது சொன்னாலும் அதைக் கேட்டு நடப்பதுதான் உள்கட்சி ஜனநாயகம் என்று வளர்ந்துவிட்ட திமுக.,வில், ஒருவர் கட்சித் தலைமையின் கருத்தை ஆமோதிக்காமல் மறுப்பு சொல்வது கட்சி விரோத நடவடிக்கை என்று கூறினர்.
இதை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக நீக்கப் பட்டிருந்தார். ஆயினும், இது போன்று தலைமையின் அரசியல் நிலவர மனநிலையைப் புரிந்து கொள்ளாமல், அதற்கு மறுப்பாக கருத்து தெரிவிப்பது, மேலும் பலரை அது போல், பேசத் தூண்டிவிட்டு, திமுக., ஜனநாயக மரபுகளையே குழிதோண்டிப் புதைத்துவிடும் என்று கூறப் பட்டதால், கேபி ராமலிங்கத்தை நிரந்தரமாக நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டது.
இதற்கான உத்தரவை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அக்கட்சியின் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது!