முதலமைச்சர் அவர்களே! நீங்கள் ரொம்ப கிரேட்!
தெலங்காணா முதல்வர் கே சி ஆர் மீது நேவி டெப்யூடி சீஃப் பாராட்டு மழை.
- கடிதம் எழுதிய வைஸ் அட்மிரல் எம்எஸ் பவார்.
- அமர ஜவான்களுக்கு உதவியதற்கு நன்றி.
நீங்கள் அபூர்வமானவர். அற்புதமானவர். பிறர் செய்யாததை சாதித்தவர். தலைமை பண்புக்கான விழுமியங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் இதயத்தின் கருணைக்கும் நீங்கள் உண்மையான எடுத்துக்காட்டு.
படைவீரர்கள் மீது உங்களுக்கு முழுமையான புரிதல் உள்ளது. உங்கள் நம்பிக்கை ஜவான்களின் பலத்தை இருமடங்காக்கும். எப்படிப்பட்ட சாகசத்தையானாலும் செய்யக்கூடிய தைரியத்தை அளிக்கிறது. முன்னாள் எம்பி கவிதா செய்த உதவியை மறக்க இயலாது. தேசம் எங்கள் பின்னால் உள்ளது என்ற தைரியத்தை அளித்துள்ளீர்கள்… பவார் புகழாரம்.
கோருகொண்டா சைனிக் ஸ்கூலை நீங்கள் வந்து பார்வையிட வேண்டும் என்று முதலமைச்சர் கேசிஆருக்கு அழைப்பு.
“உதவித்தொகை தான் எங்களால் கொடுக்க முடியும். தியாகத்திற்கு என்னவென்று விலைக்கட்ட முடியும்? உயிர் தியாகத்தை எந்த அளவுகோலைக் கொண்டு அளக்க இயலும்? நாட்டு எல்லையை பாதுகாப்பது ஒரு உத்தியோகம் அல்ல. அது ஒரு கடமை. எதிரி படை வீரர்களை உயிருக்குத் துணிந்து அடக்குவது வெறும் வேலை அல்ல. நாட்டின் மீது உள்ள அன்புக்கு, தேசபக்திக்கு எடுத்துக்காட்டு.
எல்லையென்றால் பூமியின்மேல் கிழித்த வெறும் கோடு அல்ல. அது நாட்டின் குடியரசை எடுத்துக் காண்பிக்கும் கண்ணாடி. இந்த கடமையை நிறைவேற்றுவதில் அமரர்களான படைவீரர்களுக்கு நாம் என்ன கொடுக்க இயலும்? கையை உயர்த்தி சல்யூட் செய்வதும் நாடு முழுவதும் அவருடைய குடும்பத்திற்கு உதவியாக இருப்போம் என்று சொல்வதும் தவிர? அமர்ஜவானின் குடும்பத்தை ஆதரவாக அன்பாக பார்த்துக் கொள்வது நாம் சாகசம் மிக்க சைனியத்தின் படைவீரர்களுக்கு அளிக்கும் உண்மையான நம்பிக்கை.
சைனா எல்லையில் உயிரிழந்த நம் படை வீரர்களின் விஷயத்தில் முதலமைச்சர் கேசிஆர் இதையே செய்துள்ளார்.
தெலங்காணா வீரர் சந்தோஷ் குமாரோடு கூட அமரர்களான 13 பேர் பாரத ஜவான்களின் குடும்பத்திற்கும் அபூர்வமான முறையில் அவர் துணையாக இருந்து உதவியுள்ளார். இதற்கு முதலமைச்சர் மீது பாரத படைவீரர்கள் பாராட்டுகளைக் குவித்துள்ளார்கள். கேசிஆர் எடுத்துக்கொண்ட முடிவுகள் அபூர்வம் என்றும் மிகவும் உன்னதம் என்றும் பிறருக்கும் ஆதர்ஸம் என்றும் படை அதிகாரிகள் பாராட்டியுள்ளார்கள்”.
அமர வீரர்களுக்கு உதவி செய்வது குறித்து முதலமைச்சர் கேசிஆரின் தாராள குணத்தை பாரத கடற்படை அதிகாரி டிப்யூடி சீஃப்… வைஸ் அட்மிரல் எம்எஸ் பவார் பாராட்டியுள்ளார்.
அவர் முதலமைச்சருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். கோருகொண்டா சைனிக் ஸ்கூல் முன்னாள் மாணவன் என்ற முறையில் இந்த கடிதம் எழுதுவதாக குறிப்பிட்டுள்ள பவார் முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து உள்ளார்.
சைனா எல்லையில் அமரரான சூர்யாபேட்டை வீரர் கர்னல் சந்தோஷ் பாபு கூட கோருகொண்டா சைனிக் ஸ்கூல் மாணவரே.
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயநகரம் மாவட்டம் கோருகொண்டாவில் உள்ள இந்த சைனிக் ஸ்கூலில்தான் வைஸ் அட்மிரல் பவார் கூட படித்தார். அந்தப் பள்ளியில் படித்து தற்போது பாதுகாப்பு படைத்துறையில் இருக்கும் மிகப்பெரிய சீனியர் அதிகாரி வைஸ் அட்மிரல் பவார்தான்.
கர்னல் சந்தோஷ் பாபு அமரரான உடனுக்குடன் அவருடைய குடும்பத்திற்கு நீங்கள் துணையாக உதவியாக நின்ற முறை, தாராளமாக உதவி அறிவிப்பு செய்தது, அதனை உடனுக்குடன் அமல் செய்தது… இவையெல்லாம் அபூர்வமான குணங்கள். யாருக்குமே சாத்தியப்படாதவை என்று வைஸ் அட்மிரல் பவார் தன் கடிதத்தில் புகழ்ந்துள்ளார்.
24ம் தேதி அவர் எழுதிய கடிதம் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது.
பாரத பூமியின் பாதுகாப்பில் இந்திய வீரர் உயிர் தியாகத்திற்கு கூட எப்போதும் பின்வாங்க மாட்டார் என்ற உண்மையை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. தேசிய நினைவு கம்பத்தின் மீது ஒளிரும் அமர வீரர்களின் பெயர்கள், டெல்லி சௌத் ப்ளாக் காரிடரில் காணப்படும் வெற்றி வீரர்களின் சித்திரங்களே இதற்கு எடுத்துக்காட்டு. சௌத் பிளாக்கில் உள்ள என் அலுவலகத்துக்கு போகும் ஒவ்வொரு நாளும் நான் இந்த படங்களை கர்வமாக பக்தியோடு பார்த்து வருவேன். இதுபோன்ற சாகசம் மிக்க படை வீரர்களின் கடனை தேசம் எவ்வாறு தீர்த்துக் கொள்ளப் போகிறது?
அதற்கு நீங்கள் இன்று ஒரு உதாரணமாக நின்று உள்ளீர்கள். நீங்கள் அளித்த நம்பிக்கை இன்று போர் எல்லையில் நிற்கும் நம் ஜவான்களின் ஆத்மபலத்தை இரட்டிப்பாக்குகிறது. அவர்களிடத்தில் மானசீக தைரியத்தை புகுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
எதுவானாலும் சரி என்ன நடந்தாலும் சரி என் நாட்டுக்காக முதல் வரிசையில் நிற்பேன். உயிர் போனாலும் சரி முன்னேறுவேன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கு என் தேசம் உள்ளது என்ற ஆத்ம விசுவாசத்தை நீங்கள் வீரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள். இதற்கு உங்களுக்கு மனப் பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன் என்று கேசிஆர் மீது கடற்படை அதிகாரி புகழ் மழை பொழிந்துள்ளார்.
முதலமைச்சர் கேசிஆரின் தலைமை குணங்களையும் ஒரு தலைவராக அவரில் உள்ள கருணையையும் கூட வைஸ் அட்மிரல் பவார் தன் கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
படை வீரர் அமரரான ஒவ்வொரு முறையும் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு ஒரு முதலமைச்சர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து அந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். போவதற்கு சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் நீங்கள் ஒரு முன்னுதாரணமாக நின்று உள்ளீர்கள். கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு உதவி அறிவிப்பு செய்து சில நாட்களிலேயே நீங்கள் நேராக சூர்யா பேட்டை வரை சென்று அவருடைய மனைவிக்கு உங்கள் கைகளால் அந்த உதவியை அளித்தது மிகவும் அபூர்வமான செயலே. இது உங்கள் தலைமை குணத்திற்கும் கொடைத் தன்மைக்கும் கருணைக்கும் மனிதாபிமானத்திற்கு நிதர்சனம். கர்னல் சந்தோஷ் பாபுவோடு கூட அமரர்களான 19 வீரர்களுக்கு அவர்கள் தெலங்காணாவை சேர்ந்தவர்கள் அல்லாது போனாலும் நீங்கள் தாராளமாக உதவி செய்தது சொற்களால் வர்ணிக்க இயலாத ஒரு உணர்வு.
ஆர்மி மீதும் படை வீரர்கள் மீதும் உங்களுக்கு உள்ள புரிதலுக்கு இதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை என்று கேசிஆரை நேவி டிப்யூடி சீஃப் பாராட்டியுள்ளார்.
வீரர்களுக்கு தாராளமாக உதவி கிடைக்கச் செய்வதில் கேசிஆர் மகள் முன்னாள் எம்பி கவிதா முக்கிய பாத்திரம் வகித்து சிறப்பான முயற்சி செய்தார் என்று அவர் பாராட்டியுள்ளார்.
கர்னல் சந்தோஷ் பாபு படித்த கோல்கொண்டா சைனிக் ஸ்கூலை ஒரு முறை வந்து பார்வையிட வேண்டும் என்று தெலங்காணா முதலமைச்சரை பவார் அழைத்துள்ளார்.
கோருகொண்டா சைனிக் பள்ளியில் தெலங்காணா குழந்தைகள் கூட பலர் படித்து வருகிறார்கள். அற்புதமான அதிகாரிகளை அளித்து வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. படை அதிகாரிகள் என்று மட்டுமே அல்ல… சிறந்த மனிதத்தன்மை, நிபுணத்துவம் உள்ள இளைஞர்களை அது தயார் செய்கிறது. அவ்வாறு தயாரான இளைஞர்களில் பலர் பல துறைகளில் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதனால் நீங்கள் ஒருமுறை அந்த ஸ்கூலுக்கு தவறாமல் வந்து பார்வையிட வேண்டும் என்று வைஸ் அட்மிரல் பவார் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்