ராஜஸ்தான் மாநில தோல்பூரில் ஆட்டுக்கிடாய் ஒன்று ஊரின் பேசுபொருளாகியுள்ளது. காரணம் அதனிடத்தில் பால் சுரந்ததே.
ஆட்டுக்கிடாயிடம் எப்படி பால் சுரக்க முடியும் என்று விலங்குகள் மருத்துவ நிபுணரிடம் கேட்டபோது, ”கருவில் இருக்கும்போதே ஹார்மோன் சமச்சீர்குலைவு ஏற்பட்டு இப்படி ஏற்பட வாய்ப்பு உண்டு” என்றார்.
தோல்பூரில் உள்ள குர்ஜா என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் குஷ்வாஹா, இந்த ஆட்டுக்கிடாயை இரண்டரை மாத வயதே ஆன நிலையில் வாங்கியுள்ளார்.
‘6 மாதங்கள் ஆன பிறகு இந்த ஆட்டுக்கிடாய்க்கு பால்மடி உருவாவதைக் கவனித்தோம், பால் கறந்து பார்த்தோம். பால் வந்தது. நாளொன்றுக்கு 200 முதல் 250 மி.லி. வரை பால் கறக்கிறது’ என்றார் குஷ்வாஹா.
இவரது அண்டை வீட்டுக் காரர் ரூக்மகேஷ் சாஹர், ‘நான் பார்த்ததிலேயே பால் கறக்கும் முதல் ஆட்டுக்கிடாய் இதுவாகத்தான் இருக்கும். நானே கறந்து பார்த்தேன், ஆம், அதன் மடியிலிருந்து பால் சுரந்தது’ என்றார்.
இந்த அதிசயம் எப்படிச் சாத்தியம் என்று விலங்குகள் நல மருத்துவர் கியான் பிரகாஷ் சக்சேனாவிடம் பேசியபோது, ”எப்போதும் தாயின் உடலில் ஆண், பெண் பாலின ஹார்மோன்கள் சம அளவில் இருக்கும்.
இதுதான் ஆண், பெண் உறுப்புகளைத் தீர்மானிக்கிறது. இந்த ஆட்டுக்கிடாயில் ஹார்மோன் சமநிலை குலைவினால் இப்படி ஆகியிருக்கும். ஆனால், இது அரிதினும் அரிது. லட்சத்தில் ஒன்று இப்படி பிறக்கும்” என்றார்.