தனது அத்தையை கொலை செய்துவிட்டு போலிசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நபரை ஆசை காட்டி வெளியே வரச்செய்து, தனது அத்தையின் நினைவு நாள் அன்றே போலிசில் சிக்கவைத்துள்ளார் ஒரு பெண்.
2014ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30ஆம் திகதி, தென்னாப்பிரிக்காவில் தான் நடத்தி வந்த லாட்ஜில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார் Christine Robinson (59). உடற்கூறு ஆய்வில், அவர் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, முதலில் கழுத்து நெறித்து கொல்ல முயன்று, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
அவரது அறையிலிருந்த பணம் முதலான விலையுயர்ந்த பொருட்களைக் காணாததோடு, அந்த லாட்ஜில் தோட்டக்காரராக பணியாற்றிய Andrew Ndlovu (24) என்ற நபரும் மாயமாகியிருந்தான்
CCTV கேமரா காட்சிகளில் அவன் கார் ஒன்றில் செல்வது பதிவாகியிருக்க, போலிசார் அவனை மொபைலில் தொடர்புகொண்டனர். தனது தாய்நாடான ஜிம்பாபேக்கு செல்வதாக தெரிவித்த Ndlovu, அடுத்த நாள் போலிஸ் விசாரணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டான். ஆனால், அதற்குப்பிறகு அவன் எங்கிருக்கிறான் என்ன ஆனான் என்பதே யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், பிரித்தானியாவின் கென்டில் வாழும் Christineஇன் நெருங்கிய உறவினரான Lehanne Sergison (49)க்கு அத்தையின் மரணம் குறித்து தகவல் வந்துள்ளது. தான் பிறக்கும்போது ஒரு பதின்மவயது பெண்ணாக இருந்த Christineஉடன், மிகவும் நெருக்கமாக இருந்தவர் Lehanne.
அப்படிப்பட்ட தனது அத்தை கொலை செய்யப்பட்ட தகவல் Lehanneஐ அதிர்ச்சியில் ஆழ்த்த, அதை விட முக்கியமாக குற்றவாளி தலைமறைவாகிவிட்ட செய்தி அவரை கோபமடையச் செய்துள்ளது.
குற்றவாளியை கண்டுபிடிக்கும்படி பிரித்தானிய அரசியல்வாதிகள் முதல் யாரையெல்லாமோ அணுகியும் குற்றவாளி சிக்கவில்லை.
அத்தை இறந்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் தானே தன் அத்தையைக் கொன்றவனை சிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார் Lehanne.
கணவர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் உதவியுடன் Missy Falcao என்ற பெயரில் போலியாக ஒரு பேஸ்புக் கணக்கை துவக்கினார் Lehanne. Ndlovu தென்னாப்பிரிக்காவில் இருப்பதால், தானும் தென்னாப்பிரிக்காவில் இருப்பது போலவே காட்டிக்கொண்டு தன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர் மெதுவாக Ndlovuவின் படங்களுக்கு லைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் Lehanne.
முதலில் Lehanneஐக் கண்டுகொள்ளாத Ndlovu, பின்னர் அவர் போட்டிருந்த புகைப்படத்திலுள்ள பெண்ணின் அழகில் மயங்கி அவருடன் பழக ஆரம்பித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு தன்னை சந்திக்க விரும்புவதாக Ndlovu கூற, போலிசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் Lehanne. ஆனால், குறிப்பிட்ட நாளில் தங்களால் வர இயலாது என்று கூறி போலிசார் சொதப்பிவிட, அந்த வாய்ப்பு கைநழுவிப்போயிருக்கிறது. Ndlovuம் பேஸ்புக்கில் Lehanneக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட, அடுத்த கட்டமாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் அவர்.
ஜூலை 30ஆம் திகதி, தன் அத்தையின் நினைவு நாளான அன்று, தன் அத்தைக்கு ஒரு இரங்கல் அஞ்சலியை பேஸ்புக்கில் வெளியிட்டு, அத்துடன் Ndlovuவின் படத்தை போட்டு, ஆறு ஆண்டுகளுக்குமுன் இந்த நபர்தான் தனது அத்தையை வன்புணர்ந்து கொலை செய்துவிட்டதாக தான் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அந்த செய்தியை தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் அமைப்பு ஒன்று பகிர, சில மணி நேரங்களுக்குள் அந்த செய்தி 70,000 முறை பகிரப்பட்டிருக்கிறது.
சிறிது நேரத்தில் ஒரு பெண், தனக்கு Ndlovuவை தெரியும் என்றும் தங்கள் பண்ணையில் அவன் வேலை செய்வதாகவும் தெரிவித்ததோடு, இந்த செய்தியை அவனிடம் காட்டியதாகவும், அவன் அழுகையுடன் அது தான் இல்லை என்று கூறியதாகவும் Lehanneக்கு தகவலளித்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் Ndlovu கைது செய்யப்பட்டிருக்கிறான். ஆகத்து மாதம் 3ஆம் திகதி அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். போலிசார் செய்ய முடியாத ஒன்றை, அதன் அத்தையின் மீதான அளவுகடந்த அன்பினால் செய்து காட்டியிருக்கிறார் Lehanne.