மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள போதிலும் தமிழகத்தில் உள்ள பல அரசுப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கடந்த 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது அதனை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தினசரி வருகை புரிந்து மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு அருகாமையில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று அரசின் நலதிட்ட உதவிகளை பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்கி விட்ட போதிலும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராமல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அண்மையில் விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்விற்காக சென்றபோது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர் அதில் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தினசரி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனோவை காரணமாக காட்டி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருவதில்லை என்று தெரியவந்துள்ளது.