திருவனந்தபுரம் அருகே பேட்டை ஆனையறா பகுதியை சேர்ந்தவர் சுஜித் மகள் கவுரி நந்தனா (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நகை பறிப்பு வழக்கு தொடர்பாக, பேட்டை எஸ்ஐ மீது உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார் சுஜித். அவரிடம் சமரசம் பேச எஸ்ஐ அணுகினார். அதற்கு சுஜித் மறுத்து விட்டார். அதன்பிறகு 2 ரவுடிகளை சமரசம் பேச அனுப்பியுள்ளார் எஸ்ஐ. அதற்கும் மசியவில்லை. அடிக்கடி அவரது வீட்டுக்கு ரவுடிகள் வந்து மிரட்டி சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் மாணவி கவுரி நந்தனா, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ”எனது தந்தை எஸ்ஐக்கு எதிராக புகார் கூறினார். அதனால் ரவுடிகள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிரட்டி ரகளை செய்கின்றனர். கமிஷனருக்கு புகார் செய்ததால், ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் போலீசார் எங்களை பழிவாங்க, எனது தந்தை மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போலீசார் பலமுறை மிரட்டி சென்றனர்.
பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்தும் கடுமையாக தாக்கினர். ரவுடிகள் மிரட்டுவதாலும், போலீசார் அடிக்கடி வந்து பிரச்னை செய்வதாலும், என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேட்டை போலீசார் கூறுகையில், ஒரு பெண்ணிடம் இருந்து நகையை பறித்து, அவரை வீட்டுக்குள் சிறை வைத்தது தொடர்பாக சுஜித், அவரது மனைவிக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 பேரும் முன்ஜாமீனில் உள்ளனர் என்றனர்.