ஸ்மார்ட்போனை திருடனிடம் பறிகொடுத்தார் ஒருவர். அவரது போனை அன்லாக் செய்ய முடியாததால் திருடன் திருப்பிக் கொடுத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே பர்த்வான் மாவட்டத்தில் இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி ஜமால்புரில் உள்ள ஒரு இனிப்புக் கடைக்குச் சென்ற நபர், கவனக்குறைவாக இருந்ததால் தனது 45 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்ஃபோனை தவறவிட்டார்.
இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பயனில்லை. தொடர்ந்த அந்த எண்ணை வேறொரு செல்லிடப்பேசியில் இருந்து அழைத்த போது ஸ்மார்ட்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.
ஆனால் தொடர்ந்து அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, கடந்த ஞாயிறன்று ஃபோனை திருடிய நபர், அழைப்பை எடுத்து, என்னால் இந்த ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்ய முடியவில்லை என்றும், அதனால் ஃபோனை உங்களிடமே திருப்பி தந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளான்.
ஆனந்த அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறை உதவியுடன், அந்த நபரின் வீட்டுக்கேச் சென்று ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். ஸ்மார்ட்ஃபோன் திரும்பக் கிடைத்துவிட்டதால், அவரது கோரிக்கையை ஏற்று காவல்துறையினர், ஃபோனை திருடியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர்.