பத்திரிகையாளர் சந்திப்பின் போது. மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்ஆர்பிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்தார். இது செய்தியாளர்களை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்தது.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூவிடம், எஸ்.பி.பி மறைவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பி இறந்ததாக நினைத்து, அம்மாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் அவர் என அமைச்சர் கூறினார்.
அத்துடன், ஜெயலலிதா மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக எதிர்கட்சியில் இருந்து குரல் கொடுத்தவர் அவர் என்றார். அப்போதுதான், செல்லூர் ராஜூ என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்குப் புரிந்தது.
அவர் உடனே குறுக்கிட்டு உயிரிழந்தது பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் என தெளிவுபடுத்தினார். இதன் பிறகே சற்று சுதாரித்துக் கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, எஸ்.பி.பியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக் கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை