கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
மனித வாழ்விற்கு இன்றியமையாத தேவைகளின் முதலாமானது உணவு.
இன்று உலக உணவு நாள்.
ஐக்கிய நாடுகள் சபை தன்னலம் கருதாது பிறர் நலம் கருதும் விவசாயிகளின் உயர்வினை விளக்க உலக உணவு தினத்தை அறிவித்துள்ளது.
மகாகவி பாரதியார் “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,” என்றார். அனைவருக்கும் உணவு கிடைக்க வலியுறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளை நிறைவேற்ற பலவித முயற்சிகளை பல நாடுகளும் எடுக்கின்றன.
நம் நாட்டு விவசாயிகளின் உழைப்பினால் இன்றைய சூழலிலும் நம் நாடு உணவுப் பொருட்கள் உற்பத்தியில் திருப்திகரமான இடத்தில் உள்ளது.
“விவசாயிகள் சேற்றிலே கால் வைக்காவிட்டால் நாம் சோற்றிலே கை வைக்க முடியாது”, என்ற ஒரு கவிஞனின் வார்த்தையில் தான் எத்தனை உண்மைகள் புதைந்துள்ளன.
ஒரு புறத்தில் வீணாக்கப்படும் பண்டங்கள், ஒருபுறம் உணவுக்காக கையேந்தும் மக்கள் என இருதரப்பு மக்களை நம் பூமி பார்க்கிறது. மாறிய வாழ்வியல் முறையில் சிறப்பு நிகழ்வுகளில் கணக்கிலடங்கா பண்டங்கள் பறிமாறப் படுவதும், அந்த சமயங்களில் வீணடிக்கப்படும் பண்டங்களை காணும் போது வேதனையே மிச்சமாகிறது.
சமீபத்தில் ஒருவர் அனுப்பிய வாசகமான ‘நாம் வீணாக்கும் ஒரு பருக்கைச் சோறை எறும்பு இழுத்துக் கொண்டு செல்லும் போது தான் புரிகிறது’, என்பதில் எத்தனை உள்ளர்த்தம் உள்ளது. நம் தமிழ் நூல்களில் உணவே சிறந்த மருந்து என விளக்கப்படுகிறது. உடம்புக்கு ஒவ்வாத உணவை தவிர்த்து, நம் விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஆரோக்கியமாக வாழ்வினை வாழ்வதற்கு நாம் முயல்வதே நமது இன்றைய கடமையாகிறது.
இந்த வருடம் ஐக்கிய சபை உலக உணவு நாளை ‘வளருவோம், ஊட்டமுடன் வளருவோம். ஒன்றாக நிலைநிறுத்தி கொள்வோம். நமது செயல்கள் நமது எதிர்காலம்’- என்ற தீமுடன் அனுசரிக்கிறது.
நாமும் விவசாயிகளுக்கு நன்றி கூறியும், ஆரோக்கிய உணவினை உண்டு, பண்டங்களை வீணடிப்பதை அறவே தவிர்த்து, நம்மால் முடிந்தளவு தேவையானோர்க்கு உணவு கிடைக்குமாறு உதவியும், நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் ஏற்பட முயற்சி செய்தும் உலக உணவு தினத்தில் நமக்கான கடமையாகும்.