சேலம் 8 வழி சாலைத் திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியுள்ள உச்ச நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளையும் இதில் விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
ரூ.1000 கோடி மதிப்பில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
ஆனால் இந்த அறிவிப்பாணைக்கு எதிராக நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் தொடங்கினர். இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி நில உரிமையாளர்கள், விவசாயிகள், பாமக., அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்டன.
இவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததுடன், 8 வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது. இந்த திட்டத்துக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஆயினும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது! அதில், விவசாயிகள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது.
இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…
8 வழி சாலைத் திட்டம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஆயினும், சென்னை – சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த விதிக்கப் பட்ட தடை தொடரும். ஆனால் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்!
8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப் படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கை செல்லாது. மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும்
உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம். நெடுச்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும்…
இதனிடையே, இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக, திமுக., தலைவர் ஸ்டாலின், பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சேலம் 8 வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
நீதிமன்றத்தில் அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை- பாஜக அரசு நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது! திட்டத்தைக் கைவிடுவதாக
@CMOTamilNadu வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்!
சேலம் -சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடுக! – அன்புமணி ராமதாஸ்!
சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு செல்லாது என்றும், அத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உழவர்களின் நலன்களை பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது; இது ஏமாற்றமளிக்கிறது.
சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாலும், திண்டிவனம் – கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருவதாலும் வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தி நான்காவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும். அதனால் தான் சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 7,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப் படுத்தப்படும்; 10 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் என்பதால் இத்திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பா.ம.க. நடத்தியது. இந்த திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை, விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தடை விதித்ததுடன், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும் ஆணையிட்டது.
சென்னை – சேலம் இடையிலான பசுமைவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் என்று எதிர்பார்த்ததால், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவையும் தாக்கல் செய்தேன். உச்சநீதிமன்றத்தில் வலிமையான சட்டப்போராட்டத்தையும் எங்கள் வழக்கறிஞர்கள் மேற்கொண்டனர். ஆனால், அவை அனைத்தையும் மீறி, 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படி ஒரு தீர்ப்பை நானோ, உழவர்களோ எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆறுதல் அளிக்கும் அம்சம் ஒன்று உள்ளது. 8 வழிச்சாலைக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, உழவர்களின் பெயர்களில் இருந்த நிலங்களை அரசாங்கத்தின் பெயர்களுக்கு மாற்றி வருவாய்த்துறை ஆவணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது. அதன்படி 8 வழிச்சாலை திட்டத்திற்காக உழவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் இப்போது ஆவணங்களின்படி உழவர்களிடமே திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது.
8 வழிச்சாலைத் திட்டத்திற்காக அந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்றால் அதற்காக புதிய அறிவிக்கை வெளியிட்டு, உழவர்களின் விருப்பங்களைக் கேட்டறிந்து அதனடிப்படையில் தான் அரசு செயல்பட வேண்டும். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட, அதற்குத் தேவையான நிலங்களை தமிழக அரசு தான் கையகப்படுத்தித் தர வேண்டும். நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களின் நலன்களைக் கருதியும், அவர்களின் விருப்பங்களின்படியும் நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு தவிர்க்க வேண்டும்.
வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் ரூ.521 கோடியில் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையே இருக்காது என்பதால் சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் உழவர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக போராடுவதில் முதன்மை இடத்தில் இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவகாரத்திலும் உழவர்கள் நலன்களை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. உறுதியாக எடுக்கும்.