தேனியை சேர்ந்த நபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 3 1/2 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக் கணக்கில் பணத்தையும், கிலோ கணக்கில் தங்கத்தையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்குவது வாடிக்கையான ஒன்று தான்.
அத்தகைய சிறப்புடைய ஏழுமலையானுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் 3 1/2 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தேனியை சேர்ந்த தங்கதுரை என்னும் அந்த நபர் ரூ.2 கோடி செலவில் சங்கு மற்றும் சக்கரத்தை தங்கத்தால் செய்து காணிக்கையாக கொடுத்திருக்கிறார்.
இதற்கு முன்னர் அவர், தங்க கத்தி, வரத ஹஸ்தம் உள்ளிட்ட பல நகைகளை வழங்கியிருக்கிறாராம். இது குறித்து பேசிய தங்கதுரை, 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசித்து வருகிறேன். அவருக்கு என்னால் முடிந்ததை காணிக்கையாக கொடுப்பேன். கொரோனா ஊரடங்கின் போது கோவிலுக்கு வராமல் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது சங்கு மற்றும் சக்கரம் செய்து காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன். அதை இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். நான் வாழும் இந்த வாழ்க்கை பெருமாள் எனக்கு கொடுத்த போனஸ் என்று உணர்ச்சி வசத்துடன் கூறியிருக்கிறார்.