இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியை அடுத்து, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மைதானத்தில் நடைபெற்றது.ஏற்கனவே 3-வது டெஸ்ட் போட்டி விரைவில் முடிந்த நிலையில் மைதானத்தில் பிட்ச் குறித்து விமர்சனங்கள் பரவலாக எழுந்தன.
நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் (60), அக்சர் படேல் (11) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 365 ரன் குவித்தது. எட்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது அக்சர் படேல் (43) ‘ரன்-அவுட்’ ஆனார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா (0), முகமது சிராஜ் (0), பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்க்ஸில் எடுத்திருந்த ரன்களுடன், 160 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப் பட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல் தலா 5 விக்கெட் எடுக்க, இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, இன்னிங்ஸ் கோல்வி கண்டது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
இதை அடுத்து, வரும் ஜூன் 18 ஆம் தேதி, லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு இந்திய அணி முன்னேறியது. இதில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.