ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை தனது 73 வயதில் மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்தது சமூக ஊடகங்களில் எதிர்ப்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது.
மைசூரை சேர்ந்தவர் 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை. அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னட செய்தித்தாள் ஒன்றில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார்.
அதில் “73 வயதான எனக்கு என்னை விட வயதில் மூத்த நல்ல ஆரோக்கியமான துணை தேவை. கட்டாயம் பிராமணராக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், “எனக்கு திருமணம் ஆகி விவகாரத்து ஆகிவிட்டது. பெற்றோர் இறந்து விட்டனர்.
நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் என யாரும் இல்லை. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வாழ்ந்து வருகிறேன். முதுமையில் மிகவும் தனிமையும், வேதனையும் எதிர்கொள்கிறேன்.
தனியாக வெளியே செல்லவும் பயமாக உள்ளது. எனவே எனக்கு நல்ல கணவர் தேவை என்பதை தாண்டி நல்ல துணை தேவை. இதனால் என் எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க முடியும். நடைபயிற்சி செல்லவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பும் ஆதரவும் குவிந்து வருகிறது. 73 வயதில் இப்படி விளம்பரம் கொடுக்கவே ஒரு தைரியம் வேண்டும், அவர் விமர்சனங்களை பொருட்படுத்த தேவையில்லை, அவரது வாழ்க்கையை வாழ அவருக்கு உரிமை உண்டு, இதில் யாரும் தடை போட முடியாது என பல ஆதரவு கருத்துகள் வந்துள்ளது.