மதுரை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்று ஏற்படாமல் இருக்க பொது மக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்பட்டுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 30.04.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிறது.
மேற்படி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாக நோய் பரவலை தடுக்கும் வகையில், மேற்படி மாநிலங்களிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நமது மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் அரசின் நேர்மையான நோக்கங்களை புரிந்து கட்டாயம் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கை கழுவவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் கண்டிப்பாக கூட்டம் கூட கூடாது என்பதையும், கூட்டமான இடங்களுக்கு செல்லமால் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது.
பொது மக்கள் மேற் குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை கவனமாகவும், கண்டிப்பாகவும் பின்பற்றுதல் அவசியமாகிறது. இது எச்சரிக்கை இருக்க வேண்டிய காலமாக அமைகிறது.
மேலும் பொதுமக்கள் கொரோனா நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, மூச்சிரைப்பு ஆகியவை தென்படும் பட்சத்தில் உடன் அருகில் உள்ள மாநகராட்சி காய்ச்சல் முகாம்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது சுகாதார துறையினரால் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களுக்கு சென்று கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்துக்கொள்வதுடன் மருத்துவர் ஆலோசனையின்படி, உடன் தனிமைப்படுத்திக்கொள்ள பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 1939 வருடத்திய பொது சுகாதார சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவு 51-இன் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் இனி வருங்காலங்களில் எவரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதத் தொகை ரூ.200- விதிக்கப்படும் என இதன் மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராதத் தொகை விதிக்க சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன் இ.ஆ.ப., கேட்டுக்கொண்டிருக்கிறார்..