வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வர இனி இ- பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லைகளில் மீண்டும் தீவிர சோதனை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இனி இ-பாஸ் இல்லாமல் தமிழகம் வருவது சாத்தியமில்லை. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் எந்த கண்காணிப்பும் இன்றி அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். மற்ற மாநிலங்களைப் போல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் கேட்கப்படவில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள், மேற்படி சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுவது மீண்டும் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள், இனி கட்டாயம் இ- பாஸ் வாங்க வேண்டும். அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட எந்தக் காரணங்களை சொன்னாலும் அனுமதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை அடுத்து, இ-பாஸ் இன்றி தமிழகத்துக்குள் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக உள்ளன. தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தீவிரம் காட்டும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் இ-பாஸ் கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது மற்ற மாவட்டங்களிலும் கடைப்பிடிக்கப்படும் என்பதால், இனி மாவட்டங்களுக்கு இடையே கூட கடந்த ஆண்டு போல் இபாஸ் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப் படும் என்று கூறப்படுகிறது.
தற்போது, பேருந்துகளில் பயணிகள் நின்று செல்ல அனுமதிக்கப் படவில்லை ! இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் நெல்லை பேருந்து நிலையங்களில் மாநகராட்சி மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து பேருந்தின் இருக்கைகளில் மட்டும் பயணிகளை அமரச்செய்து பேருந்துகளை இயக்க அனுமதித்தனர் .
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு ‘இ – பாஸ்’ முறை அமலில் உள்ளது. தற்போது வெளிமாநில பயணியருக்கும் ‘இ – பாஸ்’ முறை கட்டாயமாகி உள்ளது.
அதன்படி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து விமானங்களில் சென்னை வரும் பயணியர், தமிழக அரசிடம் இருந்து ‘இ – பாஸ்’ பெற வேண்டும். ‘இ – பாஸ்’ இல்லாமல் வரும் பயணியரை கொரோனா பரிசோதனைக்கு பின் வெளியேற அனுமதிக்கின்றனர்.