மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவானது பக்தர்களுக்கு நேரில் கலந்து கொள்ள அனுமதியின்றி ஆகம முறைகளின் படி, கோயில் பட்டர்கள், அர்ச்சகர்கள் மூலம் உள்ளுக்குள் நடத்தப்பட்டது!
பின்னர், கொரோனா பரவல் குறைந்த நிலையில் கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டது.
அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சித்திரை திருவிழா எப்போதும் போல பக்தர்கள் பங்களிப்போடு நடத்தக் கோரியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்!
இதில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்! இந்தப் போராட்டத்தால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப் பட்டனர்!
கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்யச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது! பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.