சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. இதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்து, அதனை வாங்கி வருமாறு கூறுகின்றனர்.
தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருவதால், இந்த மருந்தைப் பெற நோயாளிகளின் உறவினர்கள் பெரும் போட்டியிடுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இல்லாததால் வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் கட்டாயப் படுத்துகின்றனர். இதனால் அவர்களும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக் கொண்டு கடை கடையாகச் செல்கின்றனர். ஆனால் எந்த மருந்துக் கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். அதே நேரம் கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பவர்களிடம் கூடுதல் விலை வைத்து ரெம்டெசிவிர் விற்பனை செய்யப் படுவதாகக் கூறப் படுகிறது.
இந்நிலையில் தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த ஏப்.26ஆம் தேதி முதல் ரெம்டெசிவிர்மருந்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இங்கே கூட்டம் அலைமோதியதால், மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களிலும் மருந்து விற்பனை தொடங்கப்பட்டது.
இருப்பினும், கீழ்ப்பாக்கத்தில் மக்கள் கூட்டமாக வந்து குவிவதால், கீழ்பாக்கத்துக்கு பதிலாக, சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட படி இன்று மருந்து விற்பனை தொடங்கியது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 கவுண்டர்களில் இன்று காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
அந்த அறிவிப்பனை அடுத்து அதிகாலை முதலே மருந்தை வாங்குவதற்கு கவுண்டர் முன் ஏராளமானோர் குவிந்தனர். மருந்து வாங்க இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் தனிநபர் இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் முண்டியடித்தனர். சிலர் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிவதால், கூட்டத்தைக் குறைக்க அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.