ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், ஆட்டோவில் 3 அல்லது 4 பேர், டிரைவருடன் சேர்ந்து 5 பேராக பயணிக்கலாம், எந்த போலீஸாரும் அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்று லைவ் டெமோ செய்து காட்டி அசத்தியுள்ளார்கள் தமிழக அமைச்சர்கள்.
தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் என மூவர் ஒரே ஆட்டோவில் குழுவாக அமர்ந்து பயணித்ததுடன், முன்புறம் டிரைவர் ஒருவருடன் அருகே ஒருவர் அமர்ந்திருக்க 4 பேராகச் சென்ற புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
திமுக பிரமுகரும், சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவருக்கு ஓராண்டு நினைவு அஞ்சலி சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, தயாநிதி மாறன் – சேகர் பாபு – அன்பில் மகேஷ் ஆகிய மூவரும் கூட்டாக ஆட்டோவின் பின்பக்க சீட்டில் அமர்ந்து சென்றுள்ளனர்.
கொரோனா பரவல் இருக்கும் இந்த நேரத்தில், ஆட்டோவில் பின் வரிசையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்ல வேண்டும் என்று அரசு விதி இருக்கிறது. இதனை காவல்துறையினர் கண்டிப்பாக கண்காணித்து வருகின்றனர். சாதாரண மக்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைகின்றனர்.
இந்த நிலையில், காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கும் வகையில், பொதுமக்கள் சிரமத்தை குறைக்க, அமைச்சர்கள் இருவர், மற்றும் ஒரு எம்பி., என மூவரும் ஒன்றாக பயணித்து, பொதுமக்களுக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளனர்.
இருப்பினும், இதனை விமர்சிக்கும் சமூகவலைத்தள வாசிகள், மூன்று பேர் இந்த ஊரடங்கு காலத்தில் ஒரே சீட்டில் அமர்ந்து சென்றது, விதி மீறல் என்று சர்ச்சை செய்துவருகின்றனர். இந்த புகைப்படமும் வீடியோவும் சமூகத் தளங்களில் விவாதப்பொருள் ஆனதால், ‘அது குறுகலான தெரு என்பதால் ஆட்டோவில் சென்றோம்’ என அமைச்சர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இத்தகையை விளக்கங்களை பொதுமக்கள் கொடுத்தாலும் போலீசார் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அமைச்சர் பெருமக்களும் ஒரு எம்.பியும் அதிரடி சரவெடியாக செய்து காட்டியிருப்பதாகவும், பொதுமக்களுக்காக அமைச்சர்கள் மூலம் முதல்வர் செய்து காட்டியுள்ள அடுத்த சிக்ஸர் என்றும் சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
முன்னதாக, ஆட்டோக்களில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இ–பதிவு செய்தாக வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளதற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது.
சம்மேளன மாநில தலைவர் குமார், பொதுச்செயலாளர் சிவாஜி ஆகியோர் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஆட்டோக்களில் இரு பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பயணம் செய்வோர் இ-பதிவு செய்து வர வேண்டும் என்பது சாத்தியமற்றது. ஆட்டோ தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் இது தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதோடு போலீசாருடன் தேவையற்ற மனக்கசப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் இதனை எதிர்க்கிறது. தமிழக அரசு தலையிட்டு ஆட்டோக்களில் இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட சங்கங்கள், பகுதி குழுக்கள் முதல்வர் மற்றும் ஆட்சியர்களுக்கு மனு அளிக்க வேண்டும்… என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில், இ பதிவு என்றும் இல்லாமல், மூவருக்கும் மேல் ஆட்டோவில் பயணம் செய்து, தமிழக அமைச்சர்கள், எம்.பி., ஆகியோர் ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியுள்ளனர்!