தமிழகத்தில் மின் கட்டண விவகாரத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து பாஜக.,வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக வலைத்தளமான டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
சென்ற வருட ஊரடங்கின் போது மின்கட்டணங்கள் குறித்து மிக பெரிய புகாரை எழுப்பிய தி மு க மற்றும் அது குறித்து விவாதம் நடத்திய ஊடகங்கள், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வாய் மூடி மௌனம் காப்பது ஏன்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு செந்தில் பாலாஜி அளித்துள்ள பதில்…
மின்கட்டணம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
- மே 2019 கட்டணம்
- கடந்த மாதக் கட்டணம்
- இம்மாத ரீடிங்கை வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.
இம்மூன்றில் ஒன்றை வாடிக்கையாளரே தேர்ந்தெடுக்கலாம்.
குழப்பங்கள் இருந்தால் தீர்வு காண அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறேன்.
கவன ஈர்ப்புக்காக ஆதாரமற்ற, பொதுப்படையான குற்றச்சாட்டுகளை மின்சார வாரியம் மீது வைப்பதை தவிர்க்கவும்.
அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த துறையாக மாற்றிட கடை நிலைப் பணியாளர் வரை தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
முதலமைச்சர் எங்களிடம் அதைத்தான் வலியுறுத்தி இருக்கிறார்… என்று செந்தில் பாலாஜி பதிலளித்திருந்தார்.
இதற்கு மறு பதிவு செய்துள்ள நாராயணன் திருப்பதி, தங்களின் விளக்கத்திற்கு நன்றி. ஆதாரமில்லாத குற்றச்சாட்டு அல்ல. பொது மக்களில் பலர் பொதுவாக வைத்த குற்றச்சாட்டே. தங்களின் விளக்கம் தெளிவாக இருந்தாலும், இதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசின் கடமை. மக்கள் நலனில் அரசோடு இணைந்து பணியாற்றவே என் விமர்சனம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.