வரவேற்பு விழாவுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு வர முடியாமல் போன விருந்தினரிடம் செலவுத் தொகையை ஃபைனாக கட்ட சொல்லி அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மணப்பெண் ஒருவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து பிரபல ஹோட்டல் ஒன்றில் வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அவ்விழாவில் கலந்துகொள்ள தன்னுடைய உறவினர்கள், விருந்தினர்களை மணப்பெண்ணும் மணமகனும் அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கும்போது கண்டிப்பாக வருவீர்களா எனக்கேட்டு வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர்.
எப்படியும் அவர்கள் வந்துவிடுவார்கள் என்று எண்ணி எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனை பேருக்குண்டான இருக்கைகளை மட்டும் ஹோட்டலில் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.
அதேபோல உணவுக்காக குறிப்பிட்ட தொகையையும் முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள். வாக்கு கொடுத்தபடி அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ள ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர்.
ஆனால் ஒரு விருந்தினர் மட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண், அந்த விருந்தினருக்கு வினோத தண்டனையை கொடுத்துள்ளார்.
அந்த விருந்தினருக்காக புக் செய்த சீட்டிற்குண்டான விலை, உணவிற்கான தொகை என அனைத்தையும் சேர்த்து பட்டியலிட்டு அந்தத் தொகையை அவர் கட்டிவிட வேண்டும் என இன்வாய்ஸ் அனுப்பியிருக்கிறார்.
மொத்தமாக 240 டாலர், அதாவது இந்திய மதிப்பில் 17,700 ரூபாய். இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அந்த இன்வாய்ஸில், “விழாவிற்கு நீங்கள் வரவில்லை என எங்களிடம் போனில் அழைத்து சொல்லிருக்கலாம்.
இல்லையென்றால் விழாவிற்கு அழைக்கும்போதே வரவில்லை என தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். உங்களிடம் தெளிவில்லாததால் எங்கள் பணம் வீணாகிவிட்டது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்தத் தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்களில் ஒருசாரார் மணப்பெண் செய்தது சரி தான் என பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள். மற்றொரு சாரார் இந்த பெருந்தொற்று காலத்தில் இதுபோன்று நடப்பதெல்லாம் சகஜம்; இதற்காக இப்படியா நடந்துகொள்வது என மணப்பெண்ணை கடிந்து கொண்டுள்ளனர்.