ஐடா சூறாவளி என்று அழைக்கப்படும் சக்திவாய்ந்த 4ம் நிலை புயல் அமெரிக்க மாநிலமான லூசியானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையை கடந்தது.
இந்த புயல் அங்கு கரையை கடந்தபோது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் சின்னாபின்னமானது. மோசமான சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆயிரக்கணக்கில் மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் லூசியானா மாகாணத்தில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு சுமார் 16 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
இதனிடையே புயலின் போது நியூ ஆர்லியன்ஸ் நகரில் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 1856ம் ஆண்டுக்கு பிறகு லூசியானா மாகாணத்தை தாக்கிய மிக பயங்கரமான புயல் இதுதான்.
தற்போது ஐடா புயலால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 1856-ல் லூசியானா மாகாணத்தை லாரா என்ற பயங்கர புயல் தாக்கியதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஐடா புயலின் நடுவே விமானி ஒருவர் ஹெலிகாப்டரை செலுத்திய வீடியோ ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மெய் சிலிர்க்கவைப்பதாக இருக்கிறது.
அட்லாண்டிக் கடலை மையமாகக் கொண்ட தேசிய சூறாவளி மையம் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. தேசிய சூறாவளி மையத்தின் கூற்றுப்படி, அதிகபட்சமாக 150 மைல் வேகத்தில் இருந்து 185 மைல் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாகவும் கூறியுள்ளது.
ஏற்கனவே சூறாவளி மையம், “லூசியானா கடற்கரையில் புயல் கரையை கடக்கும் போது அது அதிதீவிர புயலாக மாறும் என்றும் ஐடா மிகவும் ஆபத்தான பெரிய சூறாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது.
தற்போது மையம் ட்வீட் செய்துள்ள அந்த வீடியோவில், “@NOAA_HurrHunter P3 @NOAASatellites விமானத்தில் பறக்கும் போது NESDIS Ocean Winds Research குழு (ஆகஸ்ட் 31) காலை #Ida உள்ளே இருந்து எடுத்த அதிர்ச்சி தரும் வீடியோ” என்று கேப்ஷன் செய்திருந்தது.
அதன்பிறகு சூறாவளி தொடர்பான பல்வேறு படங்கள் மற்றும் வீடியோக்கள் மைக்ரோ பிளாக்கிங் தளங்களில் வெளிப்பட்டன.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் கூறியதாவது, ஐடா சூறாவளி 2005 ஆம் ஆண்டின் கத்ரீனா சூறாவளியை விட மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது அமெரிக்காவின் வரலாற்றில் கடுமையான புயல்களில் ஒன்றாகும்.
இது தவிர, NOAA சூறாவளி குறித்து ஆய்வு செய்யும் அரசு அமைப்புக்குழுவின் மற்றொரு வீடியோகிளிப், ஒரு அரசு அமைப்பு நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது.
இந்த கிளிப்பில் ஐடா சூறாவளியின் கண்ணில் இரண்டு விமானிகள் பறப்பது இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவில் புயலின் தாக்கத்தையும் மீறி சென்று கண் பகுதியில் நுழைந்த காட்சிகள் நம்மை கட்டாயம் பிரமிக்க வைக்கிறது.
இதனை விமானத்தின் பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் டன் கணக்கில் கமெண்ட்ஸ்களையும் பெற்றுத்தந்துள்ளது.
Stunning video taken from inside the eye of #Ida this morning by the NESDIS Ocean Winds Research team during a flight on the @NOAA_HurrHunter P3 aircraft @NOAASatellites pic.twitter.com/sjt970Yeiq
— National Hurricane Center (@NHC_Atlantic) August 29, 2021