ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் மலர்களை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை திருப்பதி தேவஸ்தானம் கையாள இருக்கிறது .
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . அந்த வகையில் ஏழுமலையான் மற்றும் திருமலை கோயில்களில் அணிவிக்கப்படும் நூற்றுக்கணக்கான மலர் மாலைகளைக் கொண்டு வாசனைத் திரவியங்கள் , அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டது .
வரும் 13 ஆம் தேதி ஒய் . எஸ் . ஆர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்துடன் திருப்பதி தேவஸ்தானம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது . “Dry Flower Technology” யை பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் , வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .
இதுதொடர்பான கூட்டத்தில் பேசிய செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி உலர் மலர்களின் தொழில்நுட்பம் இயற்கையானதாவும் , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும் , நீண்ட காலம் பயன்படுத்தும் வகையிலும் , அதிக செலவு பிடிக்காத தொழில்நுட்பமாகவும் திகழ்ந்து வருகிறது என்று கூறினார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மலர் கொத்துகள், பேப்பர் வெயிட்கள், லேமினேட் செய்யப்பட்ட சாமி படங்கள், அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனை திரவியங்கள், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அலங்கரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பயிற்சியை திருப்பதியில் உள்ள சிட்ரஸ் ஆராய்ச்சி மையத்தில் பெண்களுக்கு தோட்டக்கலை பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.
இந்த திட்டத்திற்காக 83 லட்ச ரூபாயை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் சுவாமி படங்கள் ஏழுமலையான் பக்தர்களுக்காக திருமலையில் உள்ள விற்பனைக் கூடங்களில் விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.