தொட்டாச்சிணுங்கி, கல்லூரி வாசல் ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்த தேவயானி, காதல் கோட்டை படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு டாப் ஹீரோயின்களில் ஒருவராகி விட்டார்.
விஜய், அஜித், சரத்குமார், மம்முட்டி, சத்யராஜ், பிரபு உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
தமிழில் மட்டுமல்ல மலையாளம், பெங்காலி, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் தேவயானி நடித்துள்ளார். புகழின் உச்சியில் இருந்த தேவயானி பலரின் கனவுக்கன்னியாகவும் இருந்துள்ளார். ஹோம்லி லுக், அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தவர் தேவயானி.
டைரக்டர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய போது ராஜகுமாரனுக்கும், தேவயானிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதிக்கவில்லை.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனை 2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருத்தணி முருகன் கோயிலில் மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு பிரியங்கா, இனியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் கமிட்டான சில படங்களில் நடித்த தேவயானி, பிறகு சினிமாவில் இருந்து சின்னத்திரையில் அலைகள், மஞ்சள் மகிமை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தினார். அதில் இவர்கள் தயாரித்த 2 படங்களும் தோல்வி அடைந்தன.
அதன் பிறகு தேவயானி என்ன ஆனார் என்ற தகவலே இல்லாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன் பள்ளி ஒன்றில் தேவயாணி பகுதி நேர ஆசிரியையாக பணியாற்றி வருவதாக கூட தகவல் வந்தது. சமீபத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீஎன்ட்ரி கொடுத்தார் தேவயானி.
நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந்த நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது.
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.