பக்தியையும் சகோதரத்துவத்தையும் இணைக்கும் விநாயகர் சதுர்த்தி
-ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்
சுதந்திர போராட்ட காலத்தில் மக்களை சுதந்திர வேள்வியில் ஈடுபடுத்த பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தியை முதன்முதலில் சமுதாய நோக்கில் கொண்டாட தொடங்கினார். இதனை இன்றும் மராட்டிய மக்கள் நினைவில் வைத்து விநாயகர் சதுர்த்தியை சமுதாய நோக்கில் கொண்டாடி வருகின்றனர்.
பல தலைமுறையாக மகாராஷ்டிர மாநிலத்திலேயே வசித்து வரும் பல பிறமாநில குடும்பங்களும் விநாயகர் சதுர்த்தியை 10 நாட்களில் கொண்டாடி ‘சகோதரத்துவம்’ என்னும் அருமையான விஷயத்தை பக்தியுடன் அனுபவிக்கின்றனர்.
எங்கள் குடும்பமும் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் அவ்வூர் குழந்தைகளின் ஈடுபாட்டுடன் நாங்களும் அருமையாய் விநாயகர் சதுர்த்தியை பத்து நாட்கள் கொண்டாடி வருகிறோம்.
அண்டை வீடுகளில் உள்ள சிறார்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரம் முன்பே எங்கள் இல்லத்தில் கூடி “இந்த வருடம் நாம் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு உதவப் போகிறோம்?” என்று ஆலோசனையில் ஈடுபடுவர்.பின்னர் ஒவ்வொருவராக ஒவ்வொரு யோசனை கூறி அழகாக அடுத்த கட்டத்திற்கு செல்வர்.
பத்து நாட்களில் வரும் இந்திய மற்றும் உலக விசேஷ நாட்களை அறிந்து அதற்கேற்றபடி பல அருமையான வாசகங்களான ‘கண் தானம் செய்வோம், இயற்கையை நேசிப்போம், விலங்குகளை பாதுகாப்போம், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம், மூலிகைகளின் மகத்துவத்தை அறிவோம்’ என போஸ்டர்களை தாங்களே தயாரித்து எங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அன்பாக கொடுப்பர். இந்த வருடம் ‘கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் வியாபாரிகளுக்கு உதவுவோம் அவர்களுக்காக குரல் கொடுப்போம்’ என்று எழுதியுள்ளனர்.
எங்கள் இல்ல விநாயகப் பெருமானுக்கு காலையிலும், மாலையிலும் மராட்டியில் ஆரத்தியும் பாடி அற்புதமாய் பக்தி பரவசமாய் சூழ்நிலையை மாற்றுவர்.காலை,மாலை
இருவேளைகளிலும் இந்த பத்து நாள் விழாவில் தங்கள் இல்லங்களில் இருந்து அவர்களின் விருப்பமான எங்கள் இல்ல கணேஷாவிற்காக பிரசாதங்களும் கொண்டு வந்து படைப்பர்.
சில குழந்தைகளும் நம் தமிழ் பாடலான ‘பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்” பாடலையும் அருமையாய் பாடி மகிழ்வர்.
தமிழ் மற்றும் வடநாட்டை சேர்ந்த குழந்தைகளும் மராட்டிய இல்லங்களில் கொண்டாடப்படும் விசேஷங்களில் பங்கேற்பர்.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற நம் பாரத அன்னையின் தாரக மந்திரத்தின் சாரத்தை உணர்ந்தவர்களாக நமது நாட்டிற்கே உரிய பக்தியையும், சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ‘சகோதர சகோதரிகளே’ என உலகத்திற்கு சகோதரத்துவத்தை வலியுறுத்தியதை தாங்களும் உணர்ந்தவராய் இருப்பதால் நம் நாட்டின் பாரம்பரியமும் பாதுகாப்பாய் இளைய பாரதத்தின் கையில் உள்ளது என இதனால் மகிழ்ச்சி அடைய முடிகிறது.
மகாகவி பாரதியின் வாக்கான,
“பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! “- என நம் அடுத்த தலைமுறைக்கு உதாரணமாய் நாம் இருக்க வேண்டிய தருணம் இது.