நூறாண்டுகளைக் கடந்த ஆசியாவின் பழைமையான வளர்ப்பு யானைகள் முகாமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம் இருந்து வருகிறது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் பழங்குடி பாகன்களைக் கொண்டு 28 யானைகளைப் பராமரித்து வருகின்றனர்.
இங்கு யானைகள் தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த யானைகள் முகாமில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தரிசிக்க ஏராளமான மக்கள் வருகைதரும் நிலையில், சென்ற முறை கொரோனா காரணமாக இந்த விழா விமர்சையாக நடத்தப்படவில்லை.
இந்த முறை சிறப்பாக நடத்தப்பட்ட சதுர்த்தி விழாவில், முகாமில் உள்ள யானைகளை மாயாற்றில் குளிக்கச் செய்து, சிறப்பு அலங்காரங்களோடு மாலை அணிவித்து வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.
முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு யானைகளும் மணியடித்தபடியே மூன்று முறை கோயிலைச் சுற்றி வலம் வந்தன. பின்னர் முன்னங்கால்களை மடக்கி மண்டியிட்டும், கால்களை உயர்த்தியும் விநாயகரை வணங்கின.
அதனைத் தொடர்ந்து அனைத்து யானைகளுக்கும் பழங்கள், கரும்பு, வெல்லம், பொங்கல் ஆகியவற்றுடன் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். யானைகள் பூஜை செய்யும் நிகழ்ச்சி மற்றும் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.