சென்னை, திருநின்றவூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிச் சென்ற காலிபிளவர் பக்கோடாவில் ‘ரத்தக்கறை படிந்த பேன்டேஜ்’ இருந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளபியது. சமூகத் தளங்களில் இது குறித்து பலரும் விமர்சித்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரூ.5,200அபராதம் விதித்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், வாடிக்கையாளர் ஒருவர் இரு தினங்களுக்கு முன் இரவு காலிபிளவர் பக்கோடா வாங்கியுள்ளார்.
அதை வீட்டில் வைத்து திறந்து சாப்பிட முயன்ற போது, அதில் ‘ரத்தக்கறையுடன் கூடிய பேன்டேஜ்’ இருந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று கேட்ட போது அவருக்கு முறையான பதில் கொடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.
இந்த விவகாரம் சமூகத் தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, இது குறித்து அறிந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப் பட்ட சூப்பர் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ரூ. 5,200 அபராதம் விதித்தனர்.