ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் சிறப்பு விற்பனையின் போது புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய பெண்ணின் ஆன்லைன் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் புதிதாக வாங்கிய ஸ்மார்ட்போனில் கோளாறு இருப்பதை உணர்ந்து, அதை பிளிப்கார்டிடம் திருப்பி கொடுத்துள்ளார். திருப்பி கொடுக்கப்பட்ட ஸ்மார்ட்போனிற்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா என்று சோதனை செய்த போது இவர் மோசடி செய்யப்பட்டுள்ளார்.
ஹூக்ளியின் பத்ரேஷ்வர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாப்தானியில் வசிக்கும் காஞ்சன் ஜெய்ஸ்வால், கடந்த மாதம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது ஃப்ளிப்கார்ட்டில் இருந்து ரூ.15,000க்கு மொபைல் போனை வாங்கியதாகத் தெரிகிறது.
பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து பெற்ற மொபைல் போன் மோசமானதாக இருந்ததால் அதைப் பெற்றவுடன், மீண்டும் நிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, வங்கி இருப்பைச் சரிபார்க்க முயன்றிருக்கிறார்.
எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஆன்லைன் பேங்கிங் அம்சம் கொண்ட யோனோ ஆப்ஸை இவரின் மற்றொரு மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அவரின் வங்கி விபரங்களைப் பதிவிட்டு ஆப்ஸில் உள்நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு அவரது மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து 1.80 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி SBI Yono செயலியைப் பதிவிறக்கம் செய்து திரும்பப்பெறும் தொகையைச் சரிபார்க்க முயன்ற போது, மொத்தம் ரூ. 1.80 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 4 தவணைகளாக திருடப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
விரைவில், அவர் தனது மொபைல் போன் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்குடன் உள்ளூர் எஸ்பிஐ வங்கியின் கிளையை அடைந்து, நடந்ததை எடுத்துரைத்துள்ளார். அங்கு, வங்கி அதிகாரி அவர்களிடம், அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனால், தான் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கப்பட்டதாகவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாகப் போலீசில் புகார் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன் பிறகு காஞ்சன் உடனடியாக பதேஷ்வர் காவல் நிலையத்தின் சப்தானி காவல் நிலையத்தை அடைந்து, நடந்த சம்பவம் குறித்தும், அவர் பணத்தை ஆன்லைனில் இழந்ததைக் குறித்தும் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க சாந்தன் நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
பின்னர் அவர் சாந்தன் நகர் கமிஷனர் போலீஸ் சைபர் கிரைம் பிரிவுக்குச் சென்று இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். ஆனால், காஞ்சன் புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும் தனது பணத்தை மீட்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கவலை அடைந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாகவும், வழக்கைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், இவரது போன் எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தகவலை காவல்துறையினர் இன்னும் வெளிப்படுத்தவில்லை.
கணிப்பின்படி, காஞ்சன் பதிவிறக்கம் செய்த யோனா ஆப்ஸ் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படாமல், நேரடியாகக் கூகிள் பக்கத்தில் சர்ச் செய்து பதிவிறக்கம் செய்து சிக்கலில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது.
அசல் ஆப்ஸ் போல, இணையத்தில் ஏராளமான போலி மொபைல் ஆப்ஸ்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அசல் போன்ற போலியான ஆப்புகளைப் பயன்படுத்தும் ஹேக்கர்கள், இந்த போலி ஆப்ஸை மோசடிக்கான கருவியாக ஆன்லைனில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வங்கி சேவையைப் பயன்படுத்தும் SBI பயனர்கள் அல்லது மற்ற எந்த வங்கி பயனராக இருந்தாலும், அதிகாரப்பூர்வ ஆப்ஸை மட்டும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
பெரும்பாலும் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்குச் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.
அதேபோல், வங்கி பயனர்கள் எப்போதும் அவர்களின் வங்கி விபரங்களை மற்றவர்களிடமோ அல்லது முன்பின் தெரியாத நபர்களிடமோ தெரிவிக்காமல் இருப்பது பாதுகாப்பானது.
அவ்வப்போது, வங்கி பயனர்கள் அவர்களின் ஆன்லைன் பாஸ்வோர்டுகளை மாற்றம் செய்வதும் பாதுகாப்பானது.
சில நேரங்களில், உங்களுக்குத் தெரியாத நபர் வங்கி அதிகாரி போல் உங்களிடம் பேசி உங்களை மோசடி வலையில் சிக்க வைப்பார்கள். இவர்களிடம் எப்போது நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
உங்கள் ATM கார்டு முடக்கம் செய்யப்படும் அல்லது உங்களுக்கு இந்த அதிர்ஷ்ட சலுகை கிடைத்துள்ளது என்று பல பொய்களை அடுக்காகக் கூறி, உங்களை அவர்களின் வலையில் சிக்க வைத்து மோசடி செய்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பாக உங்களிடம் OTP கேட்டால் அழைப்பை உடனே நிராகரித்துவிடுங்கள். உண்மையில் எந்த வங்கி அதிகாரியும் உங்களை போனில் அழைத்துப் பேசமாட்டார்கள், குறிப்பாக OTP பாஸ்வோர்டை போனில் அழைத்து கேட்க்கமாட்டார்கள் என்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள்.
இப்படியான முக்கிய தகவலை ஒரு வங்கி அதிகாரி உங்களிடம் போனில் கேட்டால், அவர் வங்கி அதிகாரியாக இருக்கவே முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அது ஒரு ஹேக்கராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து உஷாராக இருங்கள்.