
உலகத்தரத்தில் இந்தியாவில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் கடந்த 6 மாதங்களில் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி ஏறக்குறைய 170 வருடங்கள் நிறைவுபெற உள்ளது. நூற்றுக்கணக்கான ரயில்களை இந்திய ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. முதல் ரயில் மும்பை மற்றும் தானே இடையே 34 கி.மீ தூரத்துக்கு இயக்கப்பட்ட அந்தக் காலத்தில் தொடங்கி, இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இன்றுவரை இருந்து வருகிறது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் ரயில்வே துறைக்கு என்று பல வருடம் தனி பட்ஜெட் போடப்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளாக அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் வந்தே பாரத் ரயில் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர், இதுவரை நாடுமுழுவதும் வந்தே பாரத் ரயில் 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது என்றும், ஒருமுறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் – பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வந்தே பராத் ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன. குறிப்பாக, கால்நடைகள் மீது மோதி வந்தே பாரத் ரயிலின் முன்பகுதிகள் சேதம் அடைந்து வருகின்றன. இதன்படி கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தற்போது வரை வந்தே பாரத் ரயில்கள் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளது தெரியவந்துள்ளது.

