More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?கர்நாடகத்தில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    கர்நாடகத்தில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை..

    கர்நாடகத்தில் முதல் முறையாக உடுப்பியில் நடமாடும் தகன மேடை வசதி செய்துதரப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மக்கள் தொகை கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி 140 கோடியை தாண்டி உள்ளது. அசுர வேகத்தில் செல்லும் மக்கள் அடர்த்தியால், உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய போதிய இடவசதி இல்லாத நிலை தற்போதே ஏற்பட்டுள்ளது. மேலும், நாட்டில் இன்றளவும் தலித் சமூகத்தினருக்கு தகனம் செய்வதற்கான நிலங்கள் மறுக்கப்படுகிறது. இந்த செயல் இறப்பிலும் ஒருவரை தீண்டாமை துரத்துவது வெட்கக்கேடான நிலையை வெளிப்படுத்துகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவில் முதூர் கிராமம் உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில், உயிரிழப்பவர்களை தகனம் செய்ய இடவசதி செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இறப்பவர்களை குந்தாப்புராவில் உள்ள தகனம் செய்யும் இடத்திற்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது அவரது உடலை மற்றொரு சமூகத்திற்கு சொந்தமான மயானத்தில் தகனம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து முதியவரின் உடல், அவரது வீட்டின் அருகே சாலையில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கிராமத்தில் உள்ள அவல நிலையை மாற்ற முதூர் கூட்டுறவு வங்கி முடிவு செய்து அதற்காக வங்கி சார்பில் இலவசமாக நடமாடும் தகன மேடை வழங்கப்பட்டுள்ளது. வங்கி தலைவர் விஜய சாஸ்திரி மற்றும் செயல் அதிகாரி பிரபாகர் பூஜாரி ஆகியோர் கேரளாவை சேர்ந்த ஸ்டார் சேர் நிறுவனத்திடம் இருந்து ரூ.5.80 லட்சம் மதிப்பிலான நடமாடும் தகன மேடையை வாங்கியுள்ளனர்.

    இந்த தகன மேடையை கிராமத்தில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், இதற்காக யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. 10 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி 2 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்பட்ட உடல் சாம்பலாகிவிடும். வாகனம் மூலம் வேண்டிய இடங்களுக்கு நடமாடும் தகன மேடை அனுப்பி வைக்கப்படும். செய்ய வேண்டிய அனைத்து பாரம்பரிய சடங்குகளையும் உடலை தகன மேடையில் வைத்து மேற்கொள்ளலாம். தகனம் செய்யும் போது புகை அல்லது துர்நாற்றம் வெளிப்படாது. மேலும் உடலும் முழுமையாக எரிந்துவிடும். 6 அடி நீளம் கொண்ட நடமாடும் தகன மேடை கிராம மக்கள் பலருக்கு உதவியாக இருக்கும். இது கர்நாடகத்தின் முதல் நடமாடும் தகன மேடை என்ற பெயரை பெற்றுள்ளது. விரைவில் இதுபோன்று மாநிலம் முழுவதும் நடமாடும் தகன மேடை திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    two × 4 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version