
கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற பேரூர்பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாணி யானைக்கு குளிக்க 60லட்சம் செலவில் நடை பயிற்சி பாதை நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.32வயது யானை கல்யாணி ஆனந்த குளியல் போட்டது.கூடி நின்ற திரளானோர் பார்த்து ரசித்தனர்.
கோயம்புத்தூர் பேரூர் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான கோபுரங்கள், மண்டபங்கள், கலை நுட்பத்துடன் காண்போரை வியக்க வைக்கும் வகையில் உள்ளன. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கல்யாணி யானை தான். இந்த கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது. இந்த நிலையில் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோவில் பின்பகுதியில் 5.5 ஏக்கர் நிலத்தில் யானை குளியல் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இந்த யானை குளியல் தொட்டி பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது.
இதனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது என அமைச்சர் பேக்கர் பாபு தெரிவித்துள்ளார்.
