யிலாடுதுறையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசைச் சாடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் மாநில பாஜக., தலைவர் அண்ணாமலை.
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் தத்தங்குடி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பழனிகுருநாதன்.55. இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுபட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி. 65. என்பவர் வேலை பார்தது வந்தார். டாஸ்மாக் மதுபானத்தை குடித்த சிறிது நேரத்தில் நேற்று இருவரும் உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுபாட்டிலில் சயனைடு கலந்திருப்பது உறுதி -செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை கூறியிருப்பதாவது…
மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?
பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.
உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
– அண்ணாமலை