ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆளுமை மிகுந்தவர்கள் என்று புளகாங்கிதப் பட்டவர்களும் எடப்பாடி கலக்குகிறார் என்று புருவத்தைத் தூக்குபவர்களும் கவனிக்க!
எடப்பாடி இன்றைக்கு ஸ்கோர் பண்ணும் மார்க்குகளுக்குக் காரணம், அரசாங்கச் சக்கரத்திற்குள் குச்சியையோ கம்பையோ விட்டு தடுக்காமல் இருப்பது தான். அரசாங்கச் சக்கரம் என்பது அப்படி வடிவமைக்கப்பட்டது.
ஒரு முதலமைச்சர் இல்லாவிட்டாலும் இயல்பாகத் தன் பணிகளைச் செய்து வர வல்லது. அதை மேலும் திறம்படச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் தம்மில் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து நிர்வாகத் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றனர். இருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டு சென்றால் நல்ல தலைவன். இல்லாவிட்டால் தேர்ந்தெடுத்த மக்கள், திறனில்லாதவர்கள் என்று பொருள்.
எடுத்துக் காட்டுக்கு, ஒரு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால், வருவாய்த் துறையும் பொதுப்பணித் துறையும் மட்டுமே முற்றிலும் சரி செய்து விட முடியும். இருந்தாலும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து செயல்படுவது மேலும் சில துறைகளின் உதவியைப் பெற்று விரைவாகவும், இன்னும் நேர்த்தியாகவும் அந்தப் பகுதிகளைச் சீரடையச் செய்ய முடியும். இதில் முதலமைச்சருக்கு என்ன வேலை? வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னரே அது குறித்த முன்னெச்சரிக்கையும், நீர் மேலாண்மை அறிந்தவர்களின் ஆலோசனை பெற்று நீர் நிலைகளை தயாராகவும் வைத்து இருந்திருக்க வேண்டும். சம்பவம் நடந்த பின் செயல்படுவது நல்ல தலைவனுக்கு/ நிர்வாகத்திற்கு அழகல்ல!
சமீபத்தில், பிரிவினை பேசி வந்த சில கோடரிக்காம்புகளை எடப்பாடி திட்டமிட்டு ஏதும் செய்யவில்லை. மாறாக என்னப்பா ஒரே தலைவலியா இருக்கு இவன்களோட ஏதாவது செய்ங்கப்பா என்று சொல்லியிருப்பார். காவல்துறை தன் கடமையைச் செய்யத் தொடங்கியது.
அதாவது நிஜமாகவே காவல்துறை தன் பணியை எந்தத் தங்கு தடையும் இன்றி செயல்படுத்தத் தொடங்கியது. எங்கேயாவது, ஏதாவது சத்தம் கேட்குதா இப்பொழுது? கேட்காது! ஏனெனில், இப்பொழுது அரசியல் தலையீடுகள் கிடையாது.
இதுவே வலுவான அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இந்நேரம் மற்ற அரசியல் கட்சியின் தூண்டுதலில் இந்தப் பிரிவினைவாதிகள் மீது இப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது. சும்மா மேலோட்டமாகச் சில வழக்குகளைப் போட்டு கண் துடைத்திருப்பர்.
அப்படி எனில், காவல்துறையில் எல்லோரும் யோக்கியர்களா என்று குறுக்கே பாயாதீர்கள். காவல்துறையிலும் ராணுவத்திலும் தலைமை சொல்லாமல் கீழேயிருப்பவர்கள் ஏதும் செய்வதில்லை. அவர்களின் எந்தச் செயலுக்கும் அவர்களின் தலைமையே பொறுப்பு!
ஒரு மேலதிகாரி பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்க நிர்பந்திக்கும் போது கீழேயிருப்பவர் 11 ஆயிரம் வாங்கிக் கொண்டு பத்தை மட்டும் மேலே அனுப்புகிறார். இப்படித் தான் நம் நிர்வாகம் சீர்குலைந்தது. அது மேலும் மேலும் தொடர்ந்து இப்பொழுது லஞ்சமும் திருட்டும் ஊழலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குச் சீரழிந்து விட்டது.
அப்படித்தான், இந்து அறநிலையத் துறையும். கோவில் சிலைகளைத் திருடியதில், கோவில் நிலங்களின் மூலம் வரும் வருமானத்தில் ஊழல் செய்தது, உண்டியல் காசுகளைத் திருடியது போன்ற செயல்களில், அர்ச்சகர்கள், கோவிலின் பிற பணியாளர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம். நிர்வாக அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களும் அவர்தம் எடுபிடிகளின் பங்குகளும் அதில் அதிகம் இருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பொறுப்பு இந்து அறநிலையத் துறை மட்டுமே!
ஒன்று, அந்தத் துறையே முன் வந்து நடந்த அத்தனை குற்றங்களையும் வெளிப் படையாக அறிவிக்க வேண்டும் (அது சாத்தியமே இல்லை)
அல்லது, முற்றிலும் சிதைந்து சீரழிந்துள்ள இந்து அறநிலையத் துறையினை உடனே முடக்கி, அனைத்துச் செயல்பாட்டினையும் தடுத்து விட்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி, தனி நிர்வாகத்தை உருவாக்கி, ஆணி வேர் வரை கடுமையாக ஆராய்ந்து, தவறு செய்த முன்னாள்/இந்நாள் அமைச்சர்கள் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை தண்டனை கொடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் கழிந்துபோகும் ஒவ்வொரு நாளும், ஏற்கெனவே நடந்த தவறுகள் முற்றிலும் மறைக்கப்பட நாம் கொடுக்கும் வாய்ப்பாகவே அமையும்!
இந்து ஆலயங்களையும் அதன் சொத்துகளையும் உடனடியாகப் பாதுகாக்க வேண்டிய அவசரத்தில் இப்போது நாம் இருக்கிறோம்!
– ஆனந்தன் அமிர்தன்