முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி கைது செய்யப் பட்டிருக்கிறார். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி லோகநாதனை கைது செய்து சின்னதாராபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மீது தவறான தகவல்களை கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே எல்ஜி மொபைல் என்னும் கடை நடத்தி வருபவர் லோகநாதன். இவர் திமுக நிர்வாகி.
இவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குறித்து கேலிச்சித்திரம், அவதூறு மற்றும் உண்மைக்கு மாறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மதுசூதன் அளித்த புகாரின் அடிப்படையில், லோகநாதன் மீது இபிகோ 203, 504, 294 (b), 506 (i) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, லோகநாதனை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் எச்சரித்துள்ளார்.