பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நடந்த இந்தியாவின் பதில் நடவடிக்கைகள் குறித்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
ஒரு கூட்டத்தில் பேசிய போது, ‘இந்த மண்ணுக்காக நான் சபதம் ஏற்றுள்ளேன். இந்த மண் வீழ நான் விடமாட்டேன். இந்த நாடு செயல்படாமல் நின்று போகவும் அனுமதிக்க மாட்டேன். நாடு வளைந்து போகவும் அனுமதிக்க மாட்டேன். எனது தாய் நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதி இது.
உங்கள் தலை பிறரை வணங்கும் வகையில் விட மாட்டேன். நான் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். எதிர்க் கட்சிகளோ என்னை ஒழித்துக் கட்ட சதி செய்கின்றன’ என்று உள்ளதை, உண்மையை, நாட்டு நடப்பைக் குறித்துப் பேசினார்.
மோடி கூறிய எதிர்க் கட்சிகளின் சதிக்கு உடந்தையாகத் திகழ்வது போல், தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் சித்தார்த் டிவிட்டர் பதிவில் கருத்து கூறியுள்ளார்.
மக்கள் நமது பாதுகாப்புப்படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். ராணுவம் தாக்குதல் நடத்தியதை மக்கள் நம்புகின்றனர். ஆனால் உங்களையும் (மோடி), உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.
புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்று கொண்டு ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள்.
பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.
இவரது கருத்து ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப் பட்ட போது, யார் இந்த சித்தார்த் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர் பலர்.
மோடிக்கு எதிராக எந்தப் பொடியன் வாய் திறந்தாலும் அவனை ஹீரோ அளவுக்கு ஊடகங்கள் உயர்த்திப் பிடிக்கின்றன என்று குற்றம் சாட்டும் பலர், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் அரசியல் பேசுவது நிறுத்தப் பட வேண்டும் என்று ஒட்டுமொத்தக் குரலில் கூறுகின்றனர்.
கற்பனைகளை மட்டுமே காட்சிப் படுத்தும் சீமான் போன்றவர்களால், மிகவும் சீரியஸாக இருக்க வேண்டிய அரசியல் களத்தில் காமெடி மட்டுமே பரிசாகக் கிடைக்கிறது என்றும், அதனால் மக்களின் எதிர்காலம் பாழாகிறது என்றும் கூறுகின்றனர்.
இயக்குனர்கள் சொல்படி படத்தில் நடித்துவிட்டுப் போகும் நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு நாங்கள் காரணம் என்பார்களா? அல்லது கதை அம்சம் கருத்து, காட்சிகள், கற்பனை எல்லாவற்றுக்கும் இயக்குனர் சொந்தம் கொண்டாடுவாரா? ஒரு வேளை இயக்குனர் ஒரு படத்தின் வெற்றிக்குத் தானே காரணம் என்று சொன்னால்… அதே மேடையில், ஹீரோவாக நான் நடித்ததே பட வெற்றிக்குக் காரணம் என்று நெஞ்சு நிமிர்த்தி பதிலடி கொடுப்பாரா சித்தார்த் என்று கிண்டலடிக்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!