காஷ்மீரை சேர்ந்தவர் ஜைரா வாசிம். டங்கல் படத்தில் நடித்ததன் மூலமாக, மிகப் பிரபலமடைந்தார். இதுதவிர, தனது நடிப்பிற்காக, தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் சினிமாவுக்கு பொருத்தமானவள் என நினைத்தேன். ஆனால், இது என்னுடைய தொழில் அல்ல என்று உணர்ந்துவிட்டேன்.
5 ஆண்டுகள் முன்பாக, நான் எடுத்த திடீர் முடிவால், நான் பாலிவுட்டில் பிரபலமடைந்துள்ளேன்.
பொதுமக்கள் என்னை மிகவும் மதிப்புடன் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு இந்த பிரபலமும், நடிப்பு தொழிலும் மன நிறைவு தரவில்லை.
என்னுடைய வேலை காரணமாக, மதத்துடன் ஒழுங்கான நட்புறவை பின்பற்ற முடியவில்லை.
இதனால், அல்லா (இறைவன்) மீது முழு ஈடுபாடு செலுத்தி, வழிபாடு எதுவும் நடத்த முடியாமல் போய்விட்டது.
எனக்குத் தேவையான அமைதி அனைத்தும் குரானில்தான் உள்ளது. அதனை படித்து தெரிந்துகொண்டேன்.
எனது மதத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ளாமல் இவ்வளவு நாட்களாக வெட்டித்தனமாக இருந்தேன் என்பது எனக்கு மிகவும் வேதனை தருகிறது.
எனது முகத்தை வெளியில் காட்டுவது எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்துவிட்டேன்.
இனி, என் முகத்தை அந்நியர்களுக்கு காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என் மதம் சொல்வதன்படியே நடந்துகொள்ளப் போகிறேன்.
இனி, சினிமா படங்களில் நடிக்கவும் விருப்பமில்லை,” என்று கூறியுள்ளார்.
18 வயதாகும் ஜைரா வாசிம் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.