கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்யத் துவங்கியது.
கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அடித்துப் பெய்த மழையால் கோவை ரயில் நிலையம் பகுதியில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மழை நீரும் சாக்கடைநீரும் கலந்துவிட்டது. அதனால் லங்கா கார்னர் பாலத்தின் கீழ் தண்ணீர் நிறைந்து வழிந்தது. இந்த சாக்கடை தண்ணியால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சாக்கடையில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.போக்குவரத்து உதவி ஆய்வாளராக உள்ளார் ஜான் கென்னடி. மழை பெய்து கொண்டிருக்கிறது எனவோ, சாக்கடை நீரால் துர்நாற்றம் அடிக்கிறது எனவோ அவர் எண்ணவில்லை. இது நம் வேலையா? என்ற நினைப்பும் அவருக்கு இல்லை. ஒரு நீளமான குச்சியை எடுத்துக் கொண்டு, சாக்கடை பகுதியில் இறங்கினார்.சாக்கடைக்கு அந்த பக்கம் ஒரு கால், இந்த பக்கம் ஒரு கால்வைத்து நின்று கொண்டு, குச்சியால் சாக்கடை அடைப்பை சரி செய்தார். அப்போது, மற்றுமொரு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாண்டியும் அங்கு வந்தார். செருப்பு அணிந்து வந்தால் வழுக்கும் என்றோ என்னவோ,அதனை கையில் எடுத்து வந்து அவரும் அடைப்பு பணியை சரி செய்தார்.இதனால் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, நிலைமை நேரானது. டிராபிக் சிக்னலில் அப்பொழுதிருந்த அனைவரும் இதனைப் பார்த்தார்கள். இருவரின் செயல்களையும் கவனித்த மக்கள் சாக்கடையை சீர் செய்த இந்த இருவரின் செயல்களை பாராட்டி வருகிறார்கள்.